டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MekedatuDam #Modi #BanwarilalPurohit #RajnathSingh
டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கியது. அந்த ஆணையம் அதை ஏற்றுக்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி சென்றார். அதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்கினார்.

இதையடுத்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். #MekedatuDam #Governor #Modi #RajnathSingh

X

Maalai Malar
www.maalaimalar.com