

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் வெட்டுபாறை செம்மரம் தோட்டத்தில் கடந்த 5-ந் தேதி இரவில் மர்ம நபர்கள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் பாணாவரம் செம்மரம் தோட்டத்தில் 6-ந் தேதி காலை வனத்துறையினர் சென்று அப்பகுதியில் பார்வையிட்டனர். அப்போது 2 செம்மரங்களை வெட்டி கீழே சாய்த்து இருப்பது தெரியவந்தது.
இது சம்பந்தமாக வேலூர் மண்டல கூடுதல் முதன்மை வனப் பாதுகாப்பு அலுவலர் செவாசிங் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் முரளிதரன் தலைமையில் வேலூர் வனசரக அலுவலர் சரவணன், ராணிப்பேட்டை வனசரக அலுவலர் கந்தசாமி, ஒடுகத்தூர் வனசரக அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் 21 பேர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டு செம்மரங்களை வெட்டியவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெட்டி சாய்க்கப்பட்டு இருந்த 2 மரங்களை துண்டுகளாக வெட்டி எடுத்து செல்ல வந்த நெமிலி பழைய வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(27) மாங்கானிபட்டு சேர்ந்த விஜயகுமார்(21) ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் திருப்பாற்கடல் அஞ்சல் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் (28) பழைய வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(20) ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.5.5 லட்சம் மதிப்பிலான ½ டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.