மெட்ரோ ரெயில் குறித்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மெட்ரோ ரெயில் குறித்து மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் ஒரு பள்ளியை சேர்ந்தவர்கள் இலவச பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மெட்ரோ ரெயில் குறித்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
Published on

மெட்ரோ ரெயில் குறித்து மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் ஒரு பள்ளியை சேர்ந்தவர்கள் இலவச பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

சென்னை நேரு பூங்கா- விமான நிலையம் இடையே 17 ரெயில் நிலையங்கள் வழியாக மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. அதேபோல் விமான நிலையம்-சின்னமலை இடையேயும், ஆலந்தூர்-பரங்கிமலை இடையேயும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓரளவு மக்கள் பயணம் செய்கின்றனர். மற்ற நாட்களில் காலை, மாலையில் முக்கிய நேரத்தில் மட்டுமே ஓரளவு மக்கள் பயணிக்கின்றனர்.

மற்ற நேரங்களில் எதிர்பார்த்த அளவு பயணிகள் கூட்டம் இல்லை. ரெயில் நிலையங்களில் ஒற்றை இலக்க எண்களிலேயே பயணிகள் இருப்பதால் பெரும்பாலான ரெயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், வடபழனி, அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம், ஆலந்தூர், விமான நிலையம் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே ஓரளவு பயணிகளை காணமுடிகிறது.

இப்படியே சென்றால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது என்பதால், மெட்ரோ ரெயில் குறித்து முதல்கட்டமாக மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிப்பதுடன், பயணிகளை ஈர்க்கவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

இதற்காக மாதம் ஒரு மாநகராட்சி பள்ளியை தேர்வு செய்து ஒரு நாளைக்கு 100 மாணவர்கள் வீதம், 10 நாட்களில் ஆயிரம் மாணவர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுக்கு பொறியாளர்கள் மூலம் விழிப்புணர்வு மற்றும் விளக்கம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஷெனாய்நகர் - விமானநிலையம் இடையே நேற்று முன் தினம் நடந்த முதல் பயணத்தில், ஷெனாய்நகரில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பக்தபிரியா தலைமையில் 10 ஆசிரியைகள், 112 மாணவிகள் ஷெனாய் நகரில் இருந்து விமான நிலையம் வரை சென்று மீண்டும் ஷெனாய் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

ரெயிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், பயன்படுத்தும் முறை, ஆபத்தான நேரங்களில் ரெயில் ஓட்டுனரிடம் பேசும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து மாணவிகளுக்கு பொறியாளர்கள் விளக்கினர். மாணவிகளின் சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

9-ம் வகுப்பு மாணவிகள் ஏ.அருள்மதி, ஜாஸ்மின் ஆகியோர் கூறும்போது, ‘திட்டமிட்ட நேரத்தில் செல்லமுடியும் என்பதுடன், விபத்தில்லா பாதுகாப்பு பயணத்தை நாம் அனுபவிக்க முடிகிறது. அனைத்துதரப்பினரும் பயணிக்கும் வகையில் கட்டணத்தை சற்று குறைத்தால் நன்றாக இருக்கும்’ என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com