ஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்

ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் லிபரல்-தேசிய கட்சி திங்கள்கிழமை கூடும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தனது உறுப்பினர்களை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது அதற்கான ரகசிய புள்ளி விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள ஊடகங்களுக்கு தவறாக அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், அந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 8200 வேர்டு ஆவணங்கள் அடங்கிய அந்த தொகுப்பில், புகலிடம் கோருவோர் எண்ணிக்கை, வரிவிதிப்பு, சிரியாவில் மோதல், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு கூற வேண்டிய பதில்கள் போன்ற விவரங்கள் அந்த மின்னஞ்சல் தகவலில் இருந்தது.

ஆஸ்திரேலியாவின் 2030க்கான இலக்கை அடைய முடியாது என்று கூறும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) பருவநிலை மாற்ற அறிக்கை பற்றி கேட்டால், அவர்களை திசை திருப்பும் வகையில், (எதிர்க்கட்சி) ஆட்சியில் இருந்தபோது, கார்பன் வரியை அறிமுகப்படுத்தியபோது, எரிசக்தி விலைகள் உயர்ந்து, தொழில்துறைகள் கடுமையான வீழ்ச்சிக்கு சென்றது. ஆனால் கார்பன் வரியை அறிமுகப்படுத்தாமல், நாங்கள் எங்கள் இலக்கை அடைவோம்  என கூற பதிலளிக்க வேண்டும் எனவும் அந்த ஆவணங்களில் இருந்தது.

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்  இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் அட்டர்னி ஜெனரல், கிறிஸ்டியன் போர்ட்டர் கருத்து கூறி உள்ளார். நவீன அரசியல் உலகில் "இம்மாதிரியான விஷயங்கள் அவ்வப்போது நடக்கும்" என்று அவர் கூறியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com