உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் - இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் - இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Published on

லண்டன்:

10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சவுதம்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இலங்கை அணியை எதிர்கொண்டது.

டாஸ் ஜெயித்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. திரிமன்னே 56 ரன்னும், தனஞ்ஜெயா டி சில்வா 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், நாதன் லயன், ஸ்டீவன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உஸ்மான் கவாஜா 89 ரன்னும், மேக்ஸ்வெல் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை, இதில் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com