திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன விவரங்களை சமர்ப்பிக்க தேவஸ்தானத்துக்கு ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவு

திருப்பதி தேவஸ்தானத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் வி.ஐ.பி.க்களுக்கான தரிசனம் குறித்த முழு விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேவஸ்தானத்துக்கு ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி கோவில்
திருப்பதி கோவில்
Published on

திருப்பதி:

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் எல்-1, எல்-2, எல்-3, என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதை ரத்து செய்து, கோவிலுக்குள் அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்று ஐதராபாத்தை சேர்ந்த உமேஷ் சந்திரா என்ற பக்தர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆந்திர ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வி.ஐ.பி. தரிசனம் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது? இதுகுறித்து தேவஸ்தான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? இதுகுறித்து அரசாணை அல்லது வழிமுறைகள் ஏதாவது ஆந்திர அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளதா? கடவுளின் முன் அனைத்து பக்தர்களும் சமம் கோவிலில் இறைவழிபாடு செய்யும் உரிமை அனைவருக்கும் பொதுவானது.

இந்த சூழலில் பிரசித்தி பெற்ற திருமலையில் வி.ஐ.பி. தரிசனத்தை அமல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், திருப்பதியில் அமல்படுத்தி வரும் வி.ஐ.பி. தரிசனம் குறித்த முழு விவரங்களையும் தேவஸ்தான நிலைக்குழுவும் ஆந்திர அரசுவும் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com