செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்.19 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

பி.இ., செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்டம்பர் 19ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
Published on

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், “செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை ஆகஸ்டு 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3-ந்தேதிக்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5-ந்தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறும் மாணவர்கள், வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெயர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, செப்டம்பர் 7-ந்தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்ககோரி நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பி.இ., செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்டம்பர் 19ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com