

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு, நேற்று சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.
பா.ஜனதாவினர் சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் தர்ணா போராட்டம் நடத்துவதாகவும், சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைத்தால், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி கூறினார்.
இந்த சூழ்நிலையில், இன்று மதியம் முதல் மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலின்போது சட்டசபையில் தொடர்ந்து அமளியை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவை சமாளிக்க ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆயத்தமாக உள்ளனர்.