

போரூர்:
போரூர் செந்தில் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தார்.
விக்னேஷ் நடவடிக்கை சரியில்லாததால் சில நாட்களுக்கு முன்பு அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் விக்னேஷ் கடனாக பெற்ற ரூ.ஆயிரத்தை கொடுத்து விட்டு ஒரிஜினல் லைசென்சு பெற்று செல்லுமாறு கூறி இருந்தனர்.
நேற்று விமான நிலையம் அருகே வந்து லைசென்சை பெற்றுக்கொள்ளுமாறு விக்னேசிடம் கால்டாக்சி நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து விக்னேஷ் தனது சகோதரர் உதயகுமாருடன் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கும், கால் டாக்சி நிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த விக்னேஷ் ஊழியர்கள் வந்த காரின் சாவியை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கால்டாக்சி நிறுவன ஊழியர்கள் இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போரூர் போலீசாருக்கும், காவல் கட்டுபாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். தாம்பரம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த விக்னேசை மீட்டனர்.
மேலும் கடத்தில் ஈடுபட்ட கால் டாக்சி ஊழியர்கள் மாரிமுத்து, கவுதம், பேசும் முருகன், சிவா, ராஜேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணையில் விக்னேசுக்கும் கால் டாக்சி நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய கவுதமின் தங்கைக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆனால் விக்னேஷ் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததால் ஏற்பட்ட மோதல் காரணமாக தான் விக்னேஷ் காரில் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.