

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை அடையாறில் சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, மா.பா. பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ராம்குமார், நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, விஜயகுமார், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.சி.அன்பழகன் ஆகியோரும் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து பெருமை சேர்த்தது அ.தி.மு.க. அரசு தான். கோர்ட்டு உத்தரவுப்படி மெரினாவில் இருந்த சிவாஜி கணேசனின் சிலை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்ததாலேயே கோர்ட்டு அதை அகற்ற உத்தரவிட்டது.
கோப்புப்படம்
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் பிரபு கூறியதாவது:-
சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலையின் கீழ் கருணாநிதியின் பெயரை பொதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அரசு தரப்பில் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சிவாஜி கணேசன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் குமரி அனந்தன், மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், சிவராஜசேகர், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #NadigarThilagam #SivajiGanesan