

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், எனது நண்பருமான ஜே.கே.ரித்தீஷ், இளம் வயதில் திடீரென்று மறைந்துவிட்டார் என்ற துயர செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
கருணாநிதியிடமும், என்னிடமும் அளப்பரிய அன்பு காட்டிய ஜே.கே.ரித்தீஷ், தி.மு.க.வில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர். ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் வாதிட்டவர்.
நாளடைவில் வேறு இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டாலும், தனது பழைய நட்பை மறந்துவிடாமல் தொடர்ந்து பாசத்துடன் பழகியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.