8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து- ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் திடீர் கைது

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கைதான வசீகரன்
கைதான வசீகரன்
Published on

போரூர்:

சென்னை- சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை 274 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்கள் அளவிடப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சமூக வலை தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி, ஊடகங்களிலும் பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார்.

பசுமை வழிச்சாலை அமைத்தால் 16 பேரை வெட்டுவேன் என்று அவர் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட குள்ளம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் லிங்கேஸ்வரன் காரியாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மதுரவாயல் ஆலப்பாக்கம் சீனிவாசன் நகரில் உள்ள வசீகரன் வீட்டுக்கு இன்று அதிகாலை காரியாப்பட்டி போலீசார் வந்தனர். அவர்கள் சென்னை போலீசாரின் உதவியோடு வசீகரனை கைது செய்தனர். பின்னர் அவரை காரியாப்பட்டிக்கு அழைத்து சென்றனர்.

வசீகரன் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com