தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் ஆகாய தாமரையை அகற்றும் பணி அடுத்த மாதம் தொடக்கம்

தமிழகம் முழுவதும் ரூ.4 கோடி செலவில் குளங்களில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் ஆகாய தாமரையை அகற்றும் பணி அடுத்த மாதம் தொடக்கம்
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஆகாய தாமரை பரவி கிடக்கிறது. இவை நீரை அதிகஅளவில் உறிஞ்சி நீர்நிலைகளின் தன்மையை அழித்து விடுகிறது. இதனால் விவசாயத்திற்கு நீர்நிலைகளால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுகிறது.

ஆகாய தாமரை, உயிர்வாழ தண்ணீரை எளிதில் ஆவியாக்கி நீர்நிலையை வறண்டு போக வைத்து விடுகிறது. இந்த நிலையை மாற்றி நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரைகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முற்றிலுமாக அப்புறப்படுத்தவேண்டும் என்று விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குளங்கள் மற்றும் நீர்நிலைகளை அழகுபடுத்துவதற்காக தென்அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட தாவரம்தான் ஆகாய தாமரை. அழகுக்கு வந்தது தற்போது ஆபத்தில் போய் முடிந்துள்ளது. இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாததால் நீர்நிலைகளில் அதிகமாக பரவி வருகிறது. இந்த தாவரம் வளரத் தொடங்கி விட்டால் ஒரு ஏரியை காப்பாற்றுவது மிகவும் கடினமான செயலாகும்.

பொதுவாக கழிவுநீர் கலக்கும் நீர்நிலைகளில்தான் ஆகாய தாமரை வேகமாக வளர்கிறது. சுத்தமான நீரில் இவை வளர்வதில்லை.

ஆகாய தாமரை நீரை ஆவியாக்கும் தன்மை கொண்டது. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம், தனது வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து நீர் நிலைகள் முழுவதும் பரவிவிடுகிறது. மிக கனமாகவும், பசுமையானதாகவும் இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது.

இதன் தண்டிலிருந்து புறப்படும் கிளைகள், விரைவில் புதிய செடியாக பரவும். இந்த தாவரம் நீர் நிலைகளில் தோன்றி, விரைவில் பரவும். இவை தண்ணீரை எளிதில் ஆவியாக்குவதால், குளம், குட்டைகள் விரைவில் வறண்டுவிடும். இதனால் இந்த ஆகாயத்தாமரைகள் விவசாயத்துக்கு மிகவும் ஊறுவிளைக்கும் ஒரு தாவரமாக திகழ்கிறது. நீர்நிலைகளில் இருந்து இவற்றை முழுமையாக அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆகாய தாமரையை கட்டுப்படுத்த வேதியியல் முறைதான் பயன்படுத்தப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் முழுவீச்சில் ஆகாய தாமரைகள் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) ரூ.4 கோடி செலவில் ஆகாய தாமரை அப்புறப்படுத்தும் பணி முழுவீச்சில் நடக்க இருக்கிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரைகள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரைகளை முழுமையாக அப்புறப்படுத்தினால் தான் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை காப்பாற்ற முடியும். அத்துடன் விவசாயத்துக்கு தேவையான நீரையும் முழுமையாக பெறமுடியும்.

தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லாததால் கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆகாய தாமரையை அகற்ற முன்வரவேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com