அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் மின்சாரம் தாக்கி, வீடுகளில் இடிந்து போன்ற சம்பவங்களால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அம்பன் புயலால் சேதமடைந்த வீடு
அம்பன் புயலால் சேதமடைந்த வீடு
Published on

தெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயலானது நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடக்க தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரைக்குள் புயல் முழு அளவில் கரையை கடந்தது.

இந்த புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

கொல்கத்தா நகரத்தில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன. வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன.

நேற்றைய நிலவரப்படி 5500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அம்பன் புயலுக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இவர்களில் கொல்கத்தா நகரில் 17 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com