போலீசுக்கு பயந்து லாரியில் இருந்து குதித்த செம்மரக் கும்பல் 7 பேர் படுகாயம்

திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற கூலி தொழிலாளர்கள் லாரியில் இருந்து குதித்த போது 7 பேர் படுகாயம் அடைந்தனர். #semmaramSmuggling
காயமடைந்தவர்களை படத்தில் காணலாம்.
காயமடைந்தவர்களை படத்தில் காணலாம்.
Published on

திருப்பதி:

திருப்பதியில் உள்ள செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு திருவண்ணாமலையை சேர்ந்த 60 கூலி தொழிலாளர்கள் திருப்பதி வன பகுதியில் செம்மரம் வெட்ட லாரியில் வந்து கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி வடமாலைபேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு லாரி செக்போஸ்ட் அருகே திடீரென நின்றது. லாரியில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

லாரியில் இருந்து குதித்ததில் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி (வயது 41), ரவி (28), கோவிந்தசாமி (28), சக்கரவர்த்தி (28), கார்த்திக் (28), திருப்பதி (28), வேதநாயகம் (41) என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

திருப்பதியில் கூலி வேலை செய்ய ஒரு லாரியில் 60 பேர் வந்ததாகவும், செம்மரம் வெட்ட வரவில்லை என கூறி உள்ளனர்.  #semmaramSmuggling

X

Maalai Malar
www.maalaimalar.com