இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் மேலும் 69 பேர் இன்று விடுதலை

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் மேலும் 69 பேர் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் மேலும் 69 பேர் இன்று விடுதலை
Published on

ராமேசுவரம்:

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் மேலும் 69 பேர் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய சிறைகளில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 160 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதையடுத்து முதல் கட்டமாக 20 மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு காரைக்கால் வந்தனர்.

இந்நிலையில் மேலும் 69 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் 8 பேரும், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் 44 பேரும், மன்னார் நீதிமன்றத்தில் 17 பேரும் என மொத்தம் 69 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்கள் இன்னும் சில தினங்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தவிர யாழ்ப் பாணம் சிறையில் இன்னும் 71 மீனவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com