மாயமாகி 77 நாட்கள் ஆனது- மாணவியை தேடும் பணியில் 500 போலீசார் நியமனம்

தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற மாணவி மாயமாகி 77 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரை தேடும் பணியில் 500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாயமாகி 77 நாட்கள் ஆனது- மாணவியை தேடும் பணியில் 500 போலீசார் நியமனம்
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டுதுறையை சேர்ந்தவர் ஜேம்ஸ். தோட்ட தொழிலாளி. இவரது மகள் ஜேஸ்னா (20). இவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சர பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி ஜேஸ்னா தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜேம்ஸ் கோட்டயம் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் கல்லூரி மாணவி இறந்து கிடப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவர் ஜேஸ்னாவாக இருக்கலாம் என கருதிய கேரள போலீசார் ஜேம்ஸ் மற்றும் அவரது உறவினர்களை அழைத்து கொண்டு செங்கல்பட்டு சென்றனர். ஆனால் பிணமாக கிடந்தவர் ஜேஸ்னா இல்லை என தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் ஜேம்ஸ் குடும்பத்தினர் கேரளா திரும்பினார்கள். தனது மகள் மாயமானது குறித்து ஜேம்ஸ் கோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து இருந்தார்.

மேலும் கேளரள முதல்-மந்திரி, டி.ஜி.பி. ஆகியோரிடமும் புகார் அளித்து இருந்தார்.

மாயமாகி 77 நாட்கள் ஆகியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தேடும் பணிக்கு சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 4 டி.எஸ்,பி.க்கள், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் என மொத்தம் 500 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் இன்று முதல் மாணவியை தேடும் பணியை தொடங்கினார்கள். மாணவி ஜேஸ்னா மாயமாகும் முன் தனது தோழிக்கு செல்போனில் தகவல் அனுப்பி உள்ளார். அதில் நான் மரணம் அடைய போகிறேன் என தெரிவித்து உள்ளார்.

இந்த தகவல் இன்று தான் சைபர் கிரைம் போலீசார் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாணவியை தேடும் பணியில் சிறப்பு குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

மாணவி மரணம் அடைய போவதாக தகவல் அனுப்பி இருந்ததால் கோட்டயம், இடுக்கி, பத்தனம் திட்டா மாவட்டங்களில் உள்ள ஆறு, கடல், வனப்பகுதி, பாழடைந்த கிணறுகள், குளம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com