

சென்னை:
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் கடந்த 6 நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 33,663 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிய நபர்கள் கடந்த 6 நாட்களில் 30,419 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் 15,216 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.