

லக்னோ:
உத்தரபிரதேசத்தில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்த மழையில் கட்டிடங்கள் இடிந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 32 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேசத்தின் கான்பூர், பண்டல்கந்த் பிராந்தியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இந்த பேய் மழையால் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் சூறாவளிக்காற்றினால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தும் பலத்த சேதங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவங்களில் சிக்கி 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பரேக் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் பலியாகினர். இந்த மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் நேற்று முன் தினம் இரவு பெய்த மழை அளவை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி பரேக் மாவட்டத்தில் 43.8 மி.மீ., பாஸ்டியில் 37 மி.மீ., ஹர்தோயில் 12 மி.மீ. மற்றும் கோரக்பூரில் 6.5 மி.மீ. அளவு மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதைப்போல மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.