சென்னை:
சென்னையில் வார விடுமுறை நாளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தி வருகிறார்கள்.
பெசன்ட்நகர், அடையாறு, மெரீனா கடற்கரை ஆகிய பகுதிகளில் அதிவேகமாக ஓட்டி செல்வதால் பொது மக்கள் பயத்தில் செல்லும் நிலை உள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இருந்தபோதிலும் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் மெரீனா கடற்கரைக்கு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் அதிவேகமாக சென்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு சென்றனர். அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் மீது மோதி விட்டு சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். இதில் 20 பேர் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.