ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொலை - 2 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் - கோப்புப்படம்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் - கோப்புப்படம்
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள், ராணுவ சாவடிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணம் படாக்சானில் யப்தல் இ பாலா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ முகாமை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

எனினும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதே சமயம் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com