2 வாக்குச்சாவடிகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் - போலீஸ் தடியடி

கள்ள ஓட்டு போட முயன்றவரை கைது செய்யக்கோரி 2 வாக்குச்சாவடிகளுக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸ் தடியடி நடத்தினர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்
மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்
Published on

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒண்டிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலையொட்டி தங்கள் வாக்கை பதிவு செய்வதற்காக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். திடீரென அங்கு வந்த ஒரு நபர் கள்ள ஓட்டு போட முயன்றார்.

இதை பார்த்த அங்கு இருந்த 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான சுரேஷ் (வயது 41 ) மற்றும் திரளான வேட்பாளர்கள் முகவர்கள் அந்த நபரை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒரு கும்பல் தேர்தல் அதிகாரி மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு கள்ள ஓட்டு போட முயன்ற நபரை வெளியே அழைத்துச் சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை அழைத்து சென்ற நபர்களை பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 2 வாக்குச்சாவடிகளை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை போலீசார் கைது செய்யாததால் ஆத்திரம் அடைந்த 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த வாக்குச்சாவடி மையத்தின் எதிரே உள்ள சுமார் 25 அடி உயரம் உள்ள கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சென்றார். உடன் இருந்தவர்கள் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

பின்னர் அனைவரும் ஒன்று திரண்டு கள்ள ஓட்டு போட முயன்ற நபரை கைது செய்யும் வரை இந்த பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு எதிரே உள்ள திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக அறிவுறுத்தினார்.

இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டி அடித்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து அலறியடித்தபடி ஓடினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் அந்த பகுதி மக்களிடம் வாக்குச்சாவடி மையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விவரம் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசாருக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com