மெரினா கடலில் மூழ்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி

மெரினாவில் திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
மெரினா கடலில் மூழ்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி
Published on

சென்னை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). ரேஷன் கடை ஊழியர். சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடந்த ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ராஜசேகர் பங்கேற்றார். ஆர்ப்பாட்டம் முடிந்து ஊர் திரும்பும் முன்பு மெரினா கடற்கரையை பார்க்க ஆசைப்பட்டு ராஜசேகர் மெரினாவுக்கு சென்றார். அங்கு கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தார்.

அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி ராஜசேகர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் ராஜசேகரை தேடினர். இந்தநிலையில் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் ராஜசேகர் உடல் கரை ஒதுங்கியது.

இதேபோல மெரினா கடலில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த மெப்சுனார் (17) என்பவர், ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமானார். சிறிது நேரத்தில் அவரது உடலும் கரை ஒதுங்கியது. நேபாளத்தை சேர்ந்த மெப்சுனார், பெரம்பூரில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்ததும், நண்பர்களுடன் மெரினாவுக்கு வந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com