18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று இறுதி விசாரணை- 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகும்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றுடன் இறுதி கட்ட விசாரணை முடிவடைகிறது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsCase #MLAsDisqualificationCase
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று இறுதி விசாரணை- 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகும்
Published on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக விமலா பரிந்துரை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் 3 நாட்கள் வாதிட்டனர்.

கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் சார்பில் அரிமா சுந்தரமும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநானும் 3 நாட்கள் வாதிட்டனர்.

அரசு தலைமை கொறடா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஜி வாதாடினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் பி.எஸ்.ராமன் இன்று இறுதி கட்ட வாதம் செய்கிறார். இன்றுடன் இறுதி கட்ட விசாரணை முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com