

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
கார் குண்டு வெடித்து சிதறியதில் அருகாமையில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்த படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.