ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் தலிபான் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் பலியாகியுள்ளனர். #Afghanistan #Talibanattack
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்ற தலிபான் அமைப்பு 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக ஒப்புக்கொண்டு இருந்தது. ஆனால் தலிபான் ஒப்புக்கொண்ட 3 நாள் போர் நிறுத்தம் என்று துவங்கும் என்பது குறித்த அறிவிப்பை தலிபான் அமைப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டிடம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். மேலும், குண்டூஷ் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் சில பகுதிகளிலும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. #Afghanistan #Talibanattack

X

Maalai Malar
www.maalaimalar.com