திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி கடந்த 14-ந் தேதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கி திருச்செந்தூரைச் சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 43) என்பவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பழுதான பிரகார மண்டபத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய மண்டபம் கட்டப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரகார மண்டபம் முழுவதையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு கடைக்காரர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.

இதன்பின்னர் பிரகார மண்டபத்தை இடிக்கும் பணி நேற்று அதிகாலை தொடங்கியது. ராட்சத எந்திரம் மூலம் பிரகார மண்டபத்தின் மேற்கூரையில் இருந்து ஒவ்வொரு பகுதியாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பக்தர்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த இடிப்பு பணிகளை திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதற்கிடையே பிரகார மண்டபத்தின் அருகில் இருந்த கடைகளும் அகற்றப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. இடிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டார். அதன்பின்பு கடைகள் அப்புறப்படுத்தப் படுவது தொடர்பாக கோவில் விருந்தினர் மாளிகையில் உதவி கலெக்டர் கணேஷ்குமார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

இதில் கோவில் கிரிபிரகார மண்டபத்தில் உள்ள கடைகளை அதன் உரிமையாளர்கள் மாலைக்குள் அப்புறப்படுத்த வேண்டும் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மாற்று கடைகளை வழங்குவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிரிபிரகார மண்டபம் அருகே உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறு கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதையறிந்த சிறு வியாபாரி கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து கடைகள் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மறியல் கைவிடப்படாததால் 120 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வியாபாரிகள் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. விரைந்து வந்து சிறு வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த பிரகார மண்டபத்தில் 196 தூண்கள் உள்ளன. இந்த மண்டபத்தை முழுவதுமாக இடித்து முடிப்பதற்கு 4 முதல் 5 நாட்களாகும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com