

உத்தர பிரதேசத்தில் லகிம்பூர் கேரி அருகே உள்ள உச்சாவ்லியா என்ற இடத்தில் சரக்கு ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அந்த வழியாக 16 பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வாகனம், கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் பயணிகள் வாகனத்தின் டிரைவர் அனுப் அஸ்வதி(25), உதவியாளர் கிஷன் (23) உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஷாஜகான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு 12 ஆக உயர்ந்தது. 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மூன்று மாத குழந்தை மற்றும் ஒரு வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பின.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.