

சென்னை:
தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் 20 மாதமாக காலியாக உள்ளது.
இங்கு துணைவேந்தராக இருந்த எம்.ராஜாராம் பதவிகாலம் 2016-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகு மத்திய துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் பெயர்களை கடந்த ஆண்டு மே மாதம் அரசு சிபாரிசு செய்தது.இதை அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் நிராகரித்துவிட்டார்.
அதன்பிறகு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கலைக்கப்பட்டு நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் புதியகுழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு புதிய துணைவேந்தரை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதியுள்ள பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி கடந்த 1-ந்தேதி கடைசி நாள் ஆகும். துணைவேந்தர் பதவிக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் இருந்து தகுதியின் அடிப்படையில் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியானவர்களின் பட்டியல் கவர்னர் ஒப்புதலுக்கு அரசு அனுப்பி வைக்கும். கவர்னர் நேர் காணல் நடத்தி துணை வேந்தரை தேர்வுசெய்து நியமனம் செய்வார். துணை வேந்தரை பரிந்துரை செய்வதற்கான தேடுதல் குழுவில் அரசு சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.சுந்தரதேவனும், பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆர்.ஞான மூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. துணைவேந்தர் தான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களுக்கு நியமனம் செய்வார்.
தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உதவி பேராசிரியர்கள் நியமனத் தில் முறைகேடு செய்து கைதானதால் துணைவேந்தர் நியமனங்களில் தகுதி அடிப்படையில் வெளிப் படை தன்மை கடைபிடிக்கப்படும் என்று பலகலைக்கழக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews