பழைய பஸ்களுக்கு பதிலாக சென்னைக்கு 100 புதிய பஸ்கள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 300 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 100 பஸ்கள் இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNBuses
பழைய பஸ்களுக்கு பதிலாக சென்னைக்கு 100 புதிய பஸ்கள்
Published on

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3200 பஸ்கள் 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

ஒரு சில பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுகிறது. கூரை, இருக்கைகள், கதவு உடைந்து காணப்படுகின்றன.

மேலும் குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு விட்டதால் அவற்றை தகுதியற்றவையாக ஒதுக்க வேண்டும். ஆனால் புதிய பஸ்கள் கொள்முதல் செய்வது தாமதம் ஆனதால் தொடர்ந்து ஓட்டை உடைசலான பஸ்களை இயக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2000 புதிய பஸ்கள் வாங்க அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக வந்த பஸ்கள் அனைத்தும் மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கப்பட்டன. மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 300 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் முதல் கட்டமாக 100 பஸ்கள் இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய பஸ்கள் பாடி கட்டும் பணி நிறைவடைந்து இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்து விடும். முதலில் 100 புதிய பஸ்கள் விடப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து பாதுகாப்பின் அடிப்டையில் வடிவமைக்கப்படுகிறது.

பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பேருந்துகள் ஒரே வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளதால் ‘பாடி’ கட்டமைக்கும் பணி தாமதமானது.

பயணிகள் இருக்கைகள் இடைவெளிவிட்டு அமைத்தல், ஊனமுற்றோருக்கான இருக்கை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு வசதியில் எந்தவித தரமும் குறையக்கூடாது என்பதில் உறுதியாக நிபந்தனை கடைபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய பஸ்கள் விடப்பட்டால் பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 ஆக குறைக்கப்பட்டதால் 40 ஆயிரம் பயணிகள் அதிகரித்துள்ளனர். மற்ற நாட்களை விட வார நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNBuses

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com