search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    நாளை அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    • 79 குண்டங்களில் 8 லட்சம் அட்சதைகள்.
    • நாளை 8-ம் கால வேள்வி பூஜை, பேரொளி ஆராதனை நடக்கிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து, கும்பாபிஷேக விழா நாளை 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோலகலமாக நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்காக 79 குண்டங்களுடன் இதுவரை எந்த கோவிலிலும் இல்லாத அளவில் வேள்வி சாலை அமைக்கப்பட்டுள்ளது. 79 குண்டங்களில் 8 லட்சம் அட்சதைகள் நடைபெற உள்ளது.

    கடந்த மாதம் (ஜனவரி) 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 29-ந்தேதி முதல்கால வேள்வி பூஜை தொடங்கியது. இன்று 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும், காலை 10 மணிக்கு அவினாசியப்பர் துணை நிற்கும் அவினாசியப்பருக்கு துணை நிற்கும் தெய்வங்களான அரசமர வினாயகர், செல்வ வினாயகர், பாதிரியம்மன், வீரபத்திரர், உள்பிரகார கோஷ்ட தேவதைகள், தட்சிணாமூர்த்தி, பைரவர், செந்தில் ஆண்டவர், 63 - நாயன்மார்கள், பஞ்சலிங்கம், கொடிமரம், நந்தி, பலிபீடம், நவக்கிரகம், சனீஸ்வரர், வெளி பிரகார கோஷ்ட தேவதைகள், நைருதி வினாயகர், தண்டபாணி, விஷ்ணு துர்கை, சிவதுர்கை உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடந்தது. கும்பாபிஷேக பெருவிழாவும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடக்கிறது.

    நாளை 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறைவிண்ணப்பம், பேரொளி ஆராதனை ஆகியவை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.

    மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி யும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி அவிநாசி, சேவூர், கருவலூர், பெருமாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து கிராமங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×