தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் ரஜினி சூறாவளி பயணம் - திருச்சியில் மாநாடு நடத்த திட்டம்

கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் சூறாவளி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், திருச்சியில் மாநாடு நடத்தவும் ஆலோசனை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. #Rajinikanth
தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் ரஜினி சூறாவளி பயணம் - திருச்சியில் மாநாடு நடத்த திட்டம்
Published on

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளனர்.

புதிய கட்சி தொடங்கவும், அந்த கட்சிக்கு தொண்டர்களை சேர்க்கவும் அவர்கள் இருவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். அன்றைய தினம் அவர் ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் சுற்றுப் பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.

கமல்ஹாசன் அரசியலில் முந்துவதால் ரஜினியும், தனது அரசியல் கட்சி பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கமல்ஹாசன் போல சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ரஜினி தனது புதிய கட்சியை தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் மாதம் 14-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து கட்சி பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளார்.

புதிய கட்சி அறிவித்த பிறகு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் ரஜினி சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அநேகமாக ஏப்ரல் மாதம் 3-வது வாரத்தில் ரஜினியின் சுற்றுப் பயணம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கட்சியை தொடங்கும் போதோ அல்லது அதற்கு பிறகோ மாநில அளவில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் ரஜினிக்கு கோரிக்கை வந்துள்ளது. குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தினர் இதை வலியுறுத்தி வருகிறார்கள்.

இதை ஏற்றுக் கொண்டுள்ள ரஜினிகாந்த் தனது கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டு பணிகளை இப்போதே தொடங்குமாறு அவர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதிய கட்சி தொடர்பாக ரஜினி தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது அவருடைய கவனம் முழுக்க கட்சிக்கு சுமார் 1 கோடி தொண்டர்களை திரட்ட வேண்டும் என்பதில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேசி வருகிறார்.

இன்று ரஜினியை தமிழருவிமணியன் சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேசினார். அப்போது அவர்கள் புதிய கட்சிக்கான மாநாடு மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை பற்றி விவாதித்ததாக தெரிய வந்துள்ளது.

ரஜினியின் புதிய கட்சி தொடர்பான புதிய அறிவிப்புகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. #Rajinikanth #RajinikanthPoliticalEntry #RajiniMakkalMandram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com