நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பின் காவல் 22-ந்தேதி வரை நீட்டிப்பு

கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவலை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பின் காவல் 22-ந்தேதி வரை நீட்டிப்பு
Published on

திலீப்பை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் வழக்கின் முக்கிய சாட்சியமான செல்போன் இன்னும் சிக்கவில்லை. இது குறித்து போலீசார், திலீப்பின் நண்பர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரிடம் விசாரணை நடத்தி விட்டனர்.

திலீப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயார் சியாமளாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதிலும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் திலீப் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை போலீசார் எதிர்த்தனர். மேலும் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்ட திலீப்பின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் ஏற்பாடு செய்தனர். கடந்த வாரம் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்தபோது பாதுகாப்பு கருதி திலீப்பிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டார். அதன்படி, கடந்த மாதம் 25-ந்தேதி திலீப்பிடம் காணொலி காட்சி மூலம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

அப்போது திலீப்புக்கு மேலும் 14 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி, இன்றுடன் திலீப்பின் நீதிமன்றக் காவல் முடிந்தது. இதை தொடர்ந்து இன்று 2-வது முறையாக காணொலி காட்சி மூலம் திலீப் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரிடம் முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். அதன்பின் திலீப்பின் நீதிமன்ற காவலை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து அவர் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com