பாவனாவை கடத்த திலீப் ரூ.1½ கோடி பேரம்: சதித்திட்டம் அம்பலம்

நடிகை பாவனாவை கடத்துவதற்காக நடிகர் திலீப் ரூ.1½ கோடி பேரம் பேசிய தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாவனாவை கடத்த திலீப் ரூ.1½ கோடி பேரம்: சதித்திட்டம் அம்பலம்
Published on

அவருக்கும், ஏற்கனவே இந்த வழக்கில் கைதான பல்சர் சுனிலுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து கொச்சி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுபற்றி போலீசார் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

கேரள நடிகைகளின் அமைப்பான ‘அம்மா’ சார்பில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒத்திகையின்போது பாதிக்கப்பட்ட நடிகையிடம் திலீப் மோசமாக நடந்து கொண்டதாகவும், இதை நடிகை துணிச்சலுடன் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பழிவாங்கும் எண்ணத்தில்தான் நடிகையை பாலியல் ரீதியில் துன்புறுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

அதன்பின்னர்தான் திலீப், பல்சர் சுனிலை சந்தித்து சதித் திட்டம் குறித்து விளக்கி உள்ளார். அப்போது அவர் இந்த திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றினால் ரூ.1½ கோடி பணம் தருவதாகவும், தனது படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திலீப், பல்சர் சுனில் இருவரும் பலமுறை பல இடங்களில் சந்தித்து சதித் திட்டம் குறித்து விவாதித்து இருக்கின்றனர். அப்போது நடிகையை நிர்வாணமாக படம் எடுத்தால் மட்டும் போதாது, அவருடைய நிர்வாண படம்தான் என்பதை உறுதிபடுத்தினால் மட்டுமே பேசியபடி பணத்தை தருவேன் என திலீப் திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இந்த சதித் திட்டத்தை அவர்கள் பிப்ரவரி மாதம் 17-ந்தேதி அரங்கேற்றினர்.

அன்று பல்சர் சுனில் தனது கூட்டாளிகளுடன் நடிகையை காரில் கடத்தி இருக்கிறார். காருக்குள் அவரை நிர்வாணப்படுத்தியதுடன் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளனர். மேலும் திலீப் கேட்டுக்கொண்டதுபோல் நடிகையின் நிர்வாண படம்தான் என்பதை உறுதிபடுத்தும் வகையில் நடிகையின் முகம், கழுத்து, மோதி விரல் ஆகியவற்றை மிக நெருக்கமாக படம் பிடித்தனர்.

பல்சர் சுனில் இந்த சதித் திட்டத்தை நிறைவேற்றியபிறகு தன்னிடம் பேரம் பேசிய பணத்தை திலீப்பிடம் கேட்டபோதுதான் அவர்களுக்குள் சர்ச்சை வெடித்துள்ளது. தவிர, நடிகையின் நிர்வாண படங்களை திலீப்பிடம் ஒப்படைத்த பின்னரும் பல்சர் சுனிலுக்கு பேசிய பணம் வந்து சேரவில்லை என தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அவர் ஜெயிலில் இருந்தவாறு பலமுறை திலீப்பின் மேலாளர் அப்புன்னியிடம் பேசி உள்ளார்.

மேலும் திலீப்புக்கு பலமுறை கடிதமும் எழுதி இருக்கிறார். அதில் அவர் சந்திப்பு நடந்த திலீப் சொகுசு கார்களின் எண்களையும் பல்சர் சுனில் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் திலீப் ரகசிய செல்போன் ஒன்றையும் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அவர் சினிமா தரப்பினர், குடும்பத்தினர் அல்லாத தனக்கு நெருக்கம் இல்லாதவர்களிடம் பேசியதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.

நடிகையை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற புகைப்படங்களும் கிடைத்து உள்ளன. இந்த சதித்திட்டத்தை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக புகைப்படக்கலை நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் திலீப் மீது இந்திய தண்டனை சட்டம் 376-டி (கூட்டு பலாத்காரம்) 120-டி (சதித்திட்டம்) 366 (கடத்தல்) 201 (குற்றங்களை மறைத்தல்) 212 (குற்றவாளிகளை பாதுகாத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பிரிவுகளின் கீழ் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைதானது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவருக்கும் போட்டியாக முன்னணி கதாநாயகன் அந்தஸ்தில் திலீப் இருந்தார். இவர் நடித்த படங்கள் கேரளாவில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தன. ஒரு படத்தில் நடிக்க திலீப் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இவர் படங்களின் தொலைக்காட்சி உரிமை மட்டும் ரூ.5 கோடிக்கு வியாபாரம் ஆனது.

சினிமா தவிர ரியல் எஸ்டேட் தொழிலிலும் கணிசமாக சம்பாதித்தார். கேரளாவில் பல இடங்களை வாங்கி குவித்து விலை ஏறியதும் விற்று லாபம் பார்த்து வந்தார். கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இவருக்கு சொந்தமாக ஓட்டல்களும் உள்ளன. இவற்றில் இருந்தும் அவருக்கு தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வந்தது. திலீப்பிடம் ரூ.400 கோடி சொத்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது 3 படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அவற்றின் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் கோடிக்கணக்கில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் கவலையில் இருக்கிறார்கள். மேலும் 4 புதிய படங்களுக்கு கதை கேட்டு நடிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருந்தார். திலீப் சிறைக்கு சென்றதால் அந்த 4 படங்களில் இருந்தும் அவரை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கங்களில் இருந்து திலீப் நீக்கப்பட்டு விட்டதால் அவருக்கு திரையுலகினர் இனிமேல் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

நடிகர் திலீப் ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர். அவருக்கு தற்போது கண்டக சனி நடப்பதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com