ஐதராபாத்தில் பரபரப்பு: நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்பட நிகழ்ச்சியில் ஸ்பீக்கர் ஸ்டாண்ட் சரிந்து மாணவர்கள் காயம்!

கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் முயற்சி செய்தபோதிலும், ரசிகர்கள் மேடையின் அருகே வரத் தொடங்கினர்.
Toxic pre release/Hyderabad
Published on

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்வின் போது, எதிர்பாராதவிதமாக ஸ்பீக்கர் ஸ்டாண்ட் சரிந்து விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் 'டாக்ஸிக்' படத்தின் பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'கே.ஜி.எஃப்' படப் புகழ் நடிகர் யாஷைக் காண்பதற்காகப் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களும், ரசிகர்களும் ஒரே நேரத்தில் திரண்டதால் அப்பகுதியே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் முயற்சி செய்தபோதிலும், ரசிகர்கள் மேடையின் அருகே வரத் தொடங்கினர்.

ஸ்பீக்கர் ஸ்டாண்ட் சரிந்து விழுந்து விபத்து

நிகழ்ச்சியின் போது நடிகர் யாஷ் மேடையில் ரசிகர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, மேடைக்கு அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்த சில மாணவர்கள், ஒலிபெருக்கி மற்றும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட இரும்பு ஸ்டாண்ட் மீது ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. பாரம் தாங்காமல் அந்த கட்டமைப்பு திடீரெனச் சரிந்து கூட்டத்தினர் மீது விழுந்தது.

இந்த விபத்தில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர், மேலும் ஒரு கல்லூரி மாணவி அதிர்ச்சியில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக மீட்டெடுக்கப்பட்ட காயமடைந்த மாணவர்கள், அம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

பேச்சை பாதியில் நிறுத்திய நடிகர் யாஷ்

மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே இந்தச் அசம்பாவிதம் நடந்ததைக் கண்ட நடிகர் யாஷ், உடனடியாகத் தனது பேச்சை நிறுத்திவிட்டு, "அங்கே அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? தயவுசெய்து கவனமாக இருங்கள், மாணவர்களுக்கு எதுவும் ஆகவில்லையே?" என அமைப்பாளர்களிடம் பதற்றத்துடன் விசாரித்தார். நிலைமை கட்டுக்குள் வந்ததை உறுதி செய்த பிறகே அவர் தனது உரையைத் தொடர்ந்தார்.

திரைப்பட விழாக்களில் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com