

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் "டாக்ஸிக்" திரைப்பட நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் நடைபெற இருந்த பட நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக "டாக்ஸிக்" திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் யாஷ், கியாரா அத்வானி உள்பட படக்குழுவினர் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் உரையாற்றினார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரை தாங்கும் பலகைகள் கொண்ட கட்டுமானத்தின் மீது ஏறினர்.
அப்போது, ஸ்பீக்கருடன் ஒட்டுமொத்த கட்டுமானமும் கீழே சரிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
இதில், மாணவர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்நிகழ்வை நடத்திய கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்தே சென்னையில் நேற்று நடைபெற இருந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 24) நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாக கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள "டாக்ஸிக்" திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.