தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்!

அரசியல் வருகை குறித்து தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை கட்சி தொடங்குவது குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
Dhanush-G.V.Prakash Kumar
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றங்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் பேசிய கருத்துகள் மற்றும் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர் விரைவில் அரசியலில் களமிறங்கக்கூடும் என்ற ஊகங்களை அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஏற்படுத்தியிருந்தது.

ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் தேவை

அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் தனுஷ், ரசிகர்கள் ஒரே இடத்தில் திரளுவது வெறும் சினிமா படங்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் அல்லது கட்-அவுட் கொண்டாட்டங்களோடு நின்றுவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். "இவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது ஒரு மிகப்பெரிய சக்தி உருவாகிறது. அந்த ஒற்றுமைக்கு சமூகப் பயனுள்ள ஒரு நோக்கம் இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

ரசிகர்கள் தங்கள் பகுதி மக்களின் தேவைகளையும், தங்களைச் சுற்றியுள்ள குடும்பங்களின் நிலைமையையும் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விழாவில் ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

ஜி.வி.பிரகாஷ் ஆதரவு

இந்நிலையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தனது முழு ஆதரவும் இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில், "நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், "தனுஷ் என்னுடைய மிகச்சிறந்த நண்பர். ஒரு நண்பராக அவர் எந்த முடிவு எடுத்தாலும், அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் கண்டிப்பாக இருக்கும்" என்று கூறினார்.

சமீபகாலமாக நடிகர் தனுஷ் தன் ரசிகர் மன்றங்களை மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக வலுப்படுத்தி வருவதும், பொது மேடைகளில் சமூகக் கருத்துகளைப் பேசி வருவதும் அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. இதனிடையே, அவரது நெருங்கிய நண்பரான ஜி.வி.பிரகாஷின் இந்த கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியல் திட்டமா?

அரசியல் வருகை குறித்த ஊகங்கள் வலுத்து வரும் அதே வேளையில், தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை கட்சி தொடங்குவது குறித்தோ அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தனுஷ் தரப்பு வட்டாரங்கள் இது முற்றிலும் சமூக நலப் பணிகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதி மட்டுமே என்றும், இதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், சமீபத்தில் தனது பள்ளிக் கட்டிடத்திற்கு புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தது, தாய்மொழி சார்ந்த விழிப்புணர்வு பேச்சுக்கள் மற்றும் ரசிகர் மன்ற சீரமைப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்த விவாதத்தை மேலும் சூடேற்றியுள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com