

தென்கொரியாவின் முன்னணி கே-பாப் இசைக்குழுவான BTS, இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக வெளியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் இந்தியா சமீபத்தில் வெளியிட்ட 'ஜெமினி' செயற்கை நுண்ணறிவுச் செயலியின் விளம்பரக் காணொளியில், BTS இசைக்குழுவின் ஏழு உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் இந்திய ரசிகர்களை நோக்கி, "நமஸ்தே இந்தியா! எப்படி இருக்கிறீர்கள்? நாங்கள் உங்களை மிகவும் தவறிவிட்டோம்" என்று இந்தியில் பேசி அசத்தியுள்ளனர். இது இந்திய ‘ஆர்மி’ எனப்படும் BTS ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
இந்த விளம்பரக் காணொளியின் போது, BTS உறுப்பினர்களான RM, சுஃகா, ஜே-ஹோப் மற்றும் வி ஆகியோர் இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஜெமினி செயலியிடம் உரையாடியுள்ளனர். குறிப்பாக மும்பையில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது பற்றியும், இந்திய உணவுகளை ருசிப்பது பற்றியும் அவர்கள் ஆலோசித்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 2020-ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அது ரத்தானது குறிப்பிடத்தக்கது.
BTS குழுவின் 'அரிராங்' உலகச் சுற்றுப்பயணப் பட்டியலில் இதுவரை இந்தியா முறைப்படி சேர்க்கப்படவில்லை என்றாலும், கூடுதல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தி மொழியில் பேசியுள்ளதால், விரைவில் இந்தியாவில் நேரலை இசை நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.