

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்தகால காதல் அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்துள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குடும்பம் மற்றும் குழந்தைகள் மீது தனக்கிருந்த ஈர்ப்பு குறித்துப் பேசிய அனுபமா, "எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்தில் எனக்கு 11 குழந்தைகள் வரை பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், எனது கடந்தகால உறவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், தவறான புரிதல்களும் அந்த எண்ணத்தை மாற்றின" எனக் கூறி வேதனை தெரிவித்தார்.
பெண்களின் இயல்பான உடலியல் மாற்றமான மாதவிடாய் குறித்து சமூகம் மற்றும் சில நபர்கள் தவறாகப் பேசுவது பற்றி தனது கவலையைப் பதிவு செய்துள்ளார். "மாதவிடாய் நேரங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வலி மற்றும் மன அழுத்தத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைப் பற்றி மட்டமாகவும் தவறாகவும் பேசிய தருணங்கள் என்னை மிகவும் காயப்படுத்தின" என்று உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் கடந்து வந்த 2 ஆண்டு கால காதல் வாழ்க்கை தனக்குக் கொடுத்த மன அழுத்தத்தையும், அதிலிருந்து தான் மீண்டு வந்த கதையையும் வெளிப்படையாகப் பேசினார். தனது முன்னாள் காதலரின் குணாதிசயம் 'அந்நியன்' திரைப்படக் கதாபாத்திரம் போல ஒரு நாளில் அன்பாகவும் (ரெமோ), அடுத்த நாளில் கொடூரமாகவும் (அந்நியன்), பின்னர் மன்னிப்பு கேட்பதாகவும் (அம்பி) மாறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மன உளைச்சலால் தனக்குத் தொடர்ந்து பதற்றம், உடல் எடை குறைவு மற்றும் கண் அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறினார். தனக்கு வந்த திருமண நிச்சயதார்த்தத்தை நிராகரித்து, அந்த உறவிலிருந்து வெளியேறிய பிறகே தனக்கு மன அமைதி கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார். இக்கட்டான காலகட்டங்களைக் கடந்து தற்போது மீண்டும் முழு கவனத்துடன் திரைப்படங்களில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனின் இந்த பேச்சு, அவரது ரசிகர்களாலும் திரையுலகினராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.