search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர்.
    • சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார்.

    சித்திரை – திருவோணம் உச்சிக்காலம், ஆனி – உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி – வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி, புரட்டாசி – வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி – திருவாதிரை உஷத்காலம், மாசி – வளர்பிறை காலைச்சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும்.

     விக்கிரகமாக மாறிய சிவனடியார்!

    கும்பகோணம் அருகில் உள்ள ஊர் கோனேரிராஜபுரம். இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் நடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில், மனித உடலில் இருப்பது போன்று ஒரு 'மரு'வையும் முடியையும் காணலாம்!

    சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரி ராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார். சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், '`கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்கவேண்டும்" என்று கட்டளையிட்டார் மன்னர். சிவ பக்தரான அந்தச் சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரகப் பணியைத் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்துகொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும்போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது! சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.

    நாட்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். `விக்கிரகம் இன்னும் தயாராக வில்லை!' என்பதை அறிந்து சினம் கொண்டவர், '`இன்னும் இரண்டு நாள்களில் விக்கிரகம் தயாராக வில்லையெனில், உம் தலை தரையில் உருளும்!'' என்று கூறிவிட்டு, ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார். கவலையில் ஆழ்ந்த சிற்பி, `அம்பலவாணா… இது என்ன சோதனை!'' என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித் துக்கொண்டிருந்தது.

    அப்போது, `ஐயா' என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்கு வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். `ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்…

    சுடுதண்ணீராக இருந்தால் நன்று!'' என்றார் சிவனடியார். சிற்பிக்கோ எரிச்சல்! இன்னும் இரண்டு நாள்களில் என் தலை உருளப்போகிறது;

    இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்!' என்று சலித்துக்கொண்டவர், `உள்ளே, உலை கலனில் கொதிக்கிறது… போய்க் குடியுங்கள்!'' என்றபடி வெளியே அமர்ந்துவிட்டார்.

    சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணமே நடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார். அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! `என்ன அதிசயம்… சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே… அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்து, கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப்பணிந்தார்.

     ஒரு சிற்பியும் ஐந்து விக்கிரகங்களும்!

    பல்லவ வம்சத்தின் சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் இயற்றும் நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை வடிவமைத்து சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அதற்காக சிறந்த சிற்பி ஒருவரைத் தேடினார்.

    கடைசியாக சோழ தேசத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவரைக் கண்டார். அவர் பெயர் நமசிவாயமுத்து. அவரும் சிறந்த சிவபக்தர். அவரிடம் நடராஜர் திருவுருவத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். மன்னரின் விருப்பப்படி நமசிவாய முத்து அதியற்புதமான தோற்றத்தில் நடராஜர் சிலையை வடிவமைத்தார். அந்த செப்புச் சிலையின் அழகில் மயங்கிய மன்னர், `செப்பில் செய்த விக்கிரகமே இவ்வளவு அழகாக இருந்தால், தங்கத்தில் வடித்தால் என் ஐயனின் திருவுருவம் இன்னும் எத்தனை பொலிவாக இருக்கும்!' என்று வியந்து, சிற்பியிடம் தங்கத்தைக் கொடுத்து சிலை வடிக்கச் சொன்னார்.

    சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார். சிலையை வடித்துவிட்டுப் பார்த்தபோது, அதுவும் செப்புச் சிலையாகவே இருந்தது. சிற்பி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த மன்னர், சிற்பியை சிறையில் அடைத்துவிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய ஈசன், `சிற்பியின் மீது தவறில்லை. அவர் வடித்த தங்க சிலையை நானே செப்புச் சிலையாக மாற்றினேன். நான் செப்புச் சிலையாகவே இருக்க விரும்புகிறேன். முதலில் செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து தென் தமிழகத்துக்கு செல்ல ஏற்பாடு செய்' என்று உத்தரவிட்டார்.

    சிற்பி இரண்டாவதாகச் செய்த சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டதுடன், முதலில் செய்த சிலையை சிற்பியிடன் கொடுத்து தென்பகுதிக்குச் செல்லும்படிக் கூறினார்.

     செப்பறையில் ஒலித்த சிலம்பொலி!

    முதலில் வடித்த நடராஜரின் செப்புச்சிலையுடன் தென் பகுதிக்குப் புறப்பட்ட சிற்பியின் பாதுகாவலுக்காக மன்னரின் படைவீரர்கள் சிலரும் உடன்சென்றனர். திருநெல்வேலியை நெருங்கியபோது சிலையின் எடை அதிகரித்தது. இதுபற்றி அவர்கள் சிற்பியிடம் கூறினர். அவரும் படைவீரர்களிடம் சிலையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்கும்படிக் கூறினார். சற்று நேரம் உறங்கிய வீரர்கள் பின்னர் கண்விழித்துப் பார்த்த போது சிலையை அங்கே காணவில்லை.

    அதனால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த சிற்பி, அந்த பகுதியை ஆண்டு வந்த மன்னர் ராம பாண்டியனிடம் முறையிட்டனர். தன்னுடைய நாட்டில் நடராஜர் சிலை காணாமல் போனதால் மனம் வருந்திய ராமபாண்டியன், படைவீரர்களுடன் சேர்ந்து சிலையைத் தேடிச் சென்றார். வழியில் காட்டுக்குள் இருந்து சிலம்பு சத்தம் கேட்டது. சிலம்பொலி கேட்ட இடத்தை நோக்கி மன்னர் தன் படைவீரர்களுடன் சென்று பார்த்தார்.

    ஓரிடத்தில் எறும்புகள் வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். எறும்புகளைத் தொடர்ந்து சென்ற மன்னர், ஓரிடத்தில் செப்புச் சிலை இருப்பதைக் கண்டார். அப்போது, `மன்னனே, இதுவே எமக்கு உகந்த இடம்.

    இந்த இடத்தில் எனக்கு ஒரு கோயிலை எழுப்பி, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்' என்று ஓர் அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் ராமபாண்டிய மன்னர் ஓர் ஆலயம் அமைத்து, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். சிற்பியால் செய்யப்பட்ட நடராஜரின் முதல் செப்புச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம்தான் செப்பறை.

     கட்டாரிமங்கலம்

    செப்பறையில் இருப்பதுபோலவே தான் தினமும் வழிபடும் நெல்லையப்பர் கோயிலிலும் நடராஜரின் செப்புச் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பிய ராமபாண்டியன், அதே சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை வடிக்க விரும்பினார். அதே தருணத்தில் ராமபாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்ட வீரபாண்டியனும் தன்னுடைய ஆளுகையின் கீழுள்ள கட்டாரி மங்கலத்தில் ஒரு நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பினான். ராமபாண்டியன் அதே சிற்பியிடம் இரண்டு நடராஜர் சிலைகளை வடிக்கும்படிக் கூறினார்.

    சிற்பியும் இரண்டு செப்புச் சிலைகளை வடித்து முடித்தார். தன்னுடைய சிலையை வாங்கிப் போக வந்த வீரபாண்டியன் சிலைகளின் அழகில் மயங்கிவிட்டான். இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் செல்லவேண்டுமென்று பேராசைப் பட்டான். அத்துடன் நிற்காமல், சிற்பி அதேபோல் அழகான நடராஜர் சிலைகளை வேறு யாருக்கும் செய்து கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கைகளைத் துண்டித்தான். பின்னர், அவனுடைய படைவீரர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரண்டு நடராஜர் சிலைகளையும் எடுத் துச் சென்றனர். ஒரு பிரிவினர் கட்டாரி மங்கலம் சென்று, அங்கே ஒரு நடராஜரைப் பிரதிஷ்டை செய்தனர்.

     கரிசூழ்ந்தமங்கலம்

    இரண்டாவது படைப்பிரிவினர், வேறு வழியில் சென்றுகொண்டிருந்தபோது வழியில் தாமிரபரணி குறுக்கிட்டது. தாமிரபரணிக்கும் நடராஜப் பெருமானின் திருமேனியைத் தழுவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது போலும்; வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்தாள். படைவீரர்கள் அனைவரும் சிலையுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    சிலநாள்களுக்குப் பிறகு தாமிரபரணியில் வெள்ளம் வடிந்ததும் நடராஜரின் செப்புச் சிலை கரையில் ஒதுங்கியது. அந்தப் பகுதி மக்கள் அந்த விக்கிரகத்தை ஓரிடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் செய்தியை கேள்விப்பட்ட ராம பாண்டியன், அந்த நடராஜரை நெல்லையப்பர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பி எடுத்துச் செல்ல வந்தார். ஆனால், அந்தச் சிலையை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை.

    அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய இறைவன், தான் அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், தனக்கு அங்கே ஒரு கோயில் கட்டும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு நான்காவது நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ஊர்தான், கரிசூழ்ந்தமங்கலம்.

    கன்னத்தில் கிள்ளிய சிற்பி!

    மன்னர் ராமபாண்டியர் கையை இழந்த சிற்பிக்கு மரத்தினாலான கையைப் பொருத்தினார். மரக்கை பொருத்தப்பட்டு, சிற்பி தன்னுடைய உதவியாளர்களுடன் சேர்ந்து மற்றொரு நடராஜர் சிலையை வடித்தார். சிலையை வடித்து முடித்ததும், தான் முன்பு வடித்த நான்கு சிலைகளைவிடவும் இந்த ஐந்தாவது நடராஜர் சிலை மிகவும் அழகாக இருப்பதைக் கண்ட சிற்பி, அந்தச் சிலையின் அழகில் மயங்கியவராக, அந்தத் திருமேனியின் கன்னத்தில் மெள்ள கிள்ளினார். அவர் கிள்ளிய வடு சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. அந்த சிலை கருவேலங்குளத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

     தில்லை நடராஜர்

    ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கிவைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் கருவறையின் வலது புறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜ பெருமான், ஸ்படிகலிங்கம் என தில்லையில் மூன்று வடிவங்களில் அருள்கிறார் சிவனார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயி லில் ஐந்து படிகள் அமைந்துள்ளன என்பர்.

    சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை. உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம் என்ற தேவசபை. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. கொடி மரத்தின் தென்புறம் உள்ள இது, நிருத்த சபை எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்கு மிடம் ஆயிரம் கால் மண்டபம். இது ராஜசபை.

     குடகத் தில்லை அம்பலவாணன்

    சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு தில்லையம்பலத்தானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, பட்டீஸ்வர நடராஜர் ஆனந்த தாண்டவத்தில் தரிசனம் தந்தார். இதன் காரணமாக இங்கிருக்கும் நடராஜருக்கு `குடகத் தில்லை அம்பலவாணன்' என்ற என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    பஞ்ச நதன நடராஜர்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பாடாலூர். இங்கிருந்து புள்ளம்பாடி எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர். இத்தலத்தின் ஸ்ரீபஞ்ச நதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை என்று சொல்லப்படும் அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், நீண்டநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணப் பிராப்தம் கிடைக்கும். சம்மேளன அர்ச்சனை என்பது சுவாமி, அம்பாள் இருவருக்கும் சேர்த்து செய்யப்படுவது.

     திருவெண்காடு நடராஜர்

    திருவெண்காடு தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமான், ஈரேழு பதினான்கு புவனங் களைக் குறிக்கும் வகையில் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நம: வரையுள்ள 81 பத மந்திரங்களைக் குறிக்கும் 81 வளையங்கள் கோக்கப்பட்ட அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத் துண்டுகள் கோத்த ஆரம், பதினாறு கலைகளைக் குறிக்கும் வகையில் 16 சடைகளுடன் காட்சி தருகிறார்.

     திருநல்லம் நடராஜர்

    கும்பகோணம் அருகே நல்லம் என்ற திருத் தலத்தில் அருளும் நடராஜரை உற்று நோக்கினால், அவரது கையில் உள்ள ரேகைகளும், காலில் உள்ள நரம்புகளும் தென்படுமாம். இங்கு நடராஜரை தொலைவிலிருந்து பார்த்தால் முதியவரைப் போலவும், அருகில் சென்று பார்த்தால் இளை ஞரைப் போலவும் இரண்டு திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார்.

     மயூரநாதர்

    பொதுவாக சிவன் கோயில்களில் நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர்தான் இருப்பார்கள். ஆனால் மயிலாடு துறை மயூரநாதர் கோயிலில் நடராஜருடன் ஜுரஹர தேவரும் இருக்கிறார். இந்தத் தலத்தில் அம்பிகைக்காக ஈசன் மயில் வடிவம் எடுத்து நடனம் ஆடியதால், இங்குள்ள நடராஜரை `மயூர தாண்டவர்' என்கிறார்கள். மூன்று கால்களுடன் வித்தியாசமான கோலத்தில் இருக்கும் ஜுரஹர தேவரை தரிசித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

    மரகத நடராஜர்

    உத்திரகோசமங்கையில், மரகத நடராஜரை ஆருத்ரா அன்று மட்டுமே பூரணமாக தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் சந்தனக்காப்புடன் காட்சி தருகிறார். இறைவன், உமையவள் மட்டும் கண்டு மகிழும்படி ஆடியது இத்தலதில்தான். `உத்திரம்' என்ற சொல்லுக்கு `உபதேசம்' என்ற பொருளும் உண்டு. `கோசம்' என்றால் `ரகசியம்'. அம்பாளுக்கு பிரணவத்தை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால், உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றது இத்தலம்.

    • செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலம் வைத்தீஸ்வரர் கோயில்.
    • மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது.

    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த எந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    இந்தியாவில் கிரக, விஞ்ஞானப் பூர்வமான ஆகர்ஷண சக்திகள் வாய்ந்த பல ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் விந்திய மலை. இம்மலைத் தொடருக்கு தெற்கில் உள்ள பூமி, அங்கார பூமி என்றும், இங்கு செவ்வாயின் தோஷம் அதிக அளவில் ஏற்படாது என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளன. இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் சக்தி வாய்ந்த எந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    சீதையை தேடிக்கொண்டு, தம்பி லட்சுமணனுடன் வனவாசம் வந்த ஸ்ரீ ராமபிரான், சீதா தேவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போரிட்டு, உயிர் துறந்த ஜடாயுவுக்கு, திருப்புட்குழி என்ற புண்ணிய தலத்தில் அந்திம தகனக் கிரியைகளைத் தன் தொடை மேலேயே செய்துவிட்டு, அதற்குப்பின் செய்ய வேண்டிய தினச்சடங்குகளை வைத்தீஸ்வரன் கோவிலில் செய்ததால், மேலும் இத்திருத்தலம் புனிதம் பெற்று, புள்ளிருக்கும் வேளூர் என சிறப்பு பெயருடன் திகழலாயிற்று.

    மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த தலத்திற்கு மேலும் அதிகமாயிற்று. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.

    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லது அவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும். செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.

    வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய் தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.

    ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி. மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார். வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.

    கோவில் வரலாறு:

    செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய்'' வந்ததாகவும் அதனை போக்க சிவபெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

    ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கிக் கொண்டு போகும் போது, ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயுவின் உடல் கீழ் விழுந்தது. அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் லட்சுமணன் உடலைக் கண்டு அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர்.

     இந்த சிதை இக்குளத்திற்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குளம் `சடாயு குளம்' என்று அழைக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது அந்த அமிர்தம் சிதறி குளத்தில் விழுந்தது. ஆதலால் இத்திருக்குளம் "சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்'' என்ற பெயர் பெற்றது.

     கோவிலின் சிறப்பம்சம்:

    இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது. இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அனைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார். மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.

    சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.

    இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சிவனை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு.

    • காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ என்றால் இல்லை.
    • முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி.

    காளி என்றதும் பொதுவாகவே நம் மக்களுக்கு அவளிடம் பக்தியையும் தாண்டி பயம் தான் ஏற்படும். ஆனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மனைப் பார்த்தால் அந்த எண்ணமே மாறி விடும். தேனை தேடி பறந்து வரும் தேனீக்களாக ஒரு முறை அம்மனை தரிசித்து வந்தால் மீண்டும் மீண்டும் அத்தலம் செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறாள் அன்னை.

    இங்கு தான், கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அளிக்கும் வரப்பிரசாதியாய் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை மதுரகாளி. காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ என்றால் இல்லை. பெயருக்கு ஏற்றார் போல் முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி.

    சிலப்பதிகார நாயகி கண்ணகி தான் இங்கு மதுரகாளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது செவி வழி செய்தி. பிரம்மேந்திராள் ஸ்ரீ சக்கரத்தை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை.

    மதுர காளியம்மன் திருக்கோயிலில், காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு நிறைவடைகிறது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர், உடுக்கை ஒலிக்க அன்னையை உரத்த குரலிட்டு அழைக்கின்றனர். அதை நேரில் கேட்கும் போது நம்மையறியாமல் உடலும் உள்ளமும் சிலிர்ப்பதை உணர முடியும். அப்படி அழைக்கும்போது மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

    ஸ்தல வரலாறு

    ஆதியிலே சிறுவாச்சூரில் செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம் ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு உட்படுத்தினான் அவன்.

    மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களை காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான்.

    தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை அற்ப மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் அன்னை மதுர காளியம்மன்.

     செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே இப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை முதலில் மலை நோக்கி காட்டப்பட்டு, பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

    மதுரை காளியம்மன் என்ற திருநாமமே மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவதால் மதுர காளியம்மன் என்ற திருநாமம் கொண்டாள் என்பதும் வழக்கு.

    சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது.

    இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக்காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது. திங்கள், வெள்ளிக்கிழமைகள் தவிர பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், நவராத்திரி நாட்களிலும் மதுரகாளியம்மனை தரிசிக்கலாம்.

    • தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.
    • ஞான சம்பந்தருக்கு, அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபம் உள்ளன.

    இந்த தஜாரோகண மண்டபத்தில்தான் அருள்தரும் கற்பகாம்பிகை நவராத்திரி கொலுவிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் திருவீதிஉலாவுக்கு புறப்படுவதற்கு முன் இங்கு வைத்து தான் அலங்காரம் செய்கிறார்கள். மண்டபத்தை யொட்டி திருமுறை பாராயண அறையும் உள்ளன. இதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

     வேத மண்டபம்

    12 கால் மண்டபத்தின் அருகே 4 கால் தூணுடன் விளங்கும் வேத மண்டபத்தில்தான் விழாகாலங்களில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலாட்டுவர்.

    அருணகிரிநாதர்

    இங்கு அருணகிரிநாதருக்கென்று தனி சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அவரை ஆட்கொண்ட முருகனின் சன்னதிக்கு எதிரிலேயே கூப்பிய கரங்களுடன் இவரது சன்னிதியும் அமைந்துள்ளது சிறப்பு.

    தங்கத்தேர் விசேஷ நாட்களில் உட்பிரகாரத்தில் உலா வரும் காட்சியைக் காண பேறு பெற்றிருக்க வேண்டும். விருப்பப்படும் பக்தர்கள் விசேஷ கட்டணம் செலுத்தி இறைவனை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து உட்பிரகாரத்தில் வலம்வரச் செய்து நல்லாசி பெறுகின்றனர்.

    திருக்குளம், நீராழி மண்டபம்

    மேற்கு பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள மேலைக் கோபுரத்தின் வழியே வெளியில் சென்றால், கடல் போல் பரந்துள்ள திருக்குளம், கபாலீ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நடுவே அழகான நீராழி மண்டபம் உள்ளது. சக்தி தீர்த்தம், முக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் இக்குளத்தின் மேற்கு கரையில் எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அதன் அருகில் ஜ்யேஷ்டா தேவியின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

    குளத்தின் வடமேற்கு மூலையில் மூன்று கால் மண்டபமும் தென்கரையில் ஞான சம்பந்தருக்கு பங்குனி விழாவில் அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபமும் உள்ளன. கிழக்கே மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் நீராடும் மண்டபமும், வடக்கில் சிவலிங்க மண்டபமும் அமைந்துள்ளது.

    இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் தைப்பூசத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முதல் நாள் சந்திசேகர சுவாமியும், இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலரும், தெப்பத்தில் எழுந்தருளுவார். முதல்நாள் ஐந்து சுற்று, இரண்டாவது நாள் ஏழு சுற்று, மூன்றாவது நாள் ஒன்பது சுற்று என மூன்று நாட்கள் தெப்பம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும் அழகைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.

    தெப்பம் புறப்படுகையில் பெண்கள் வெற்றிலையில் கற்பூரமேற்றி தண்ணீரில் விடுகின்றனர். இத்திருக்குளத்தில் முழுகி பாவங்கள் களைந்தவர்கள் அனேகம். அவ்வாறே கலிங்கத்தை ஆண்ட தருமனின் புதல்வன் சாம்பன் என்பவனும் தனது பாவங்கள் தீர இக்குளத்தில் நீராடி கற்பகாம்பிகை, கபாலீஸ்வரரை வழிபட்டு முக்தியடைந்ததாக 'தீர்த்த சர்க்கம்' என்ற நூல் தெரிவிக்கிறது.

    குளத்திற்கு எதிரே கோபுரத்தின் வடக்குப்புறத்தில் கற்பக விநாயகரையும், அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் பாலமுருகனும் நுழைவாயிலுக்கு எதிரே துவஜஸ்தம்பம் உயர்ந்து காட்சி தருகிறது. அதனருகே பலி பீடத்தையும், ரிஷப தேவரான நந்தியம் பெருமானையும், அடியார்க்கு அருள்புரிய வீற்றிருக்கும் விநாயகரையும் காணலாம்.

    ஸ்ரீ கற்பகாம்பிகை சன்னதி

    இங்கு அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறாள். சதுர்புஜங்களுடன் நின்ற திருக்கோலம். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. அதோடு வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி, நவராத்திரி காலங்களில் பூப்பாவாடை, தங்கக் காசுமாலை மற்றும் வைரக்கிளி தாடங்கமும் அணிந்து காட்சி கொடுக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளித் தொட்டிலில் அம்பாளை வைத்து வேத பாராயணம் ஒலிக்க மும்முறை வலம் வரும் அவளின் அழகைக்காண கண்கோடி வேண்டும். தமிழ் மாதத்தின் கடைசி சுக்ரவாரம் இந்த பவனியுடன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கும்.

    சன்னிதியின் தென்மேற்கில் இறைவனின் பள்ளியறை உள்ளது. பிராகார சுவர்களில் பாமாலைகளும், சவுந்தர்ய லஹரியும், அபிராமி அந்தாதியும் சலவைக் கற்களில் பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.

    • கற்பகாம்பாள் சன்னிதியில் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது.
    • ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது.

    மூலஸ்தானம்

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்-றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்த வந்தவுடன் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது. அதனருகில் சுவரில் விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள பாலகர்களைக் திரு துவார கடந்து சன்னிதியில் நுழைந்தால் ஈசன், பெரிய லிங்க உருவில் மேற்கு திசை பார்த்து காட்சி தருகிறார்.

    ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது. இம்மூர்த்தி, வழிபடுபவருக்கு உடனே காட்சி தந்து அருள்புரியும் என்கின்றனர். பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு. சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.

    274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு.

    சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.

    துர்கை

    கபாலீஸ்வரரின் கருவறையின் வடக்கு வெளிச்சுவரில் வடக்கு பார்த்து துர்கை வீற்றிருக்கிறாள். மகா வரப்ரசாதியான இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளிகிழமை தோறும் 9 வாரங்கள் ராகு கால வேளை பூஜை செய்து மங்கள சண்டிகா ஸ்தோத்ரம் படித்து வந்தால் நினைத்த காரியம் சித்தியாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    அடுத்து கோமுகம். மேலே பிரம்ம தேவன் அருள்பாலிக்கிறார். கோமுகத்திற்கருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், சுக்கிரவார அம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பிட்சாடனர், மோகினி, குண்டோதரன், அஸ்திர தேவர்,விநாயகர், வீரபாகு மற்றும் சுமித்திரத் தொண்டர் வீற்றிருக்கின்றனர்.

    அடுத்து 63 நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், தொகையடியார் 9 பேர்கள், சிவநேசர், அங்கம் பூம்பாவை, கிழக்கு நோக்கி துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஐந்துதலை நாகர், நாகப்படத்தின் கீழ் சிவலிங்கம், காமாட்சி, ஏகாம்பரேசுவரர், பெரிய சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் சிவலிங்கம், இரு நாகங்களின் படங்களின் கீழ் சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் 2 சிவலிங்கங்கள் மற்றும் தெற்கு நோக்கிய பைரவர் (அஷ்டமியில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடத்தப்படுகிறது) திருஉருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

    கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் ஒரு சிவலிங்கமும், இதனையடுத்து ஐந்து தலை நாகத்தின் படத்தின் நிழலில் மற்றொரு சிவலிங்கமும், கணேசர், வீரபத்திரர், சிவலிங்கம், சைவ நால்வர், அடுத்து ஒரு சிவலிங்கமும் நந்தி எம்பெருமானும் பொள்ளாப் பிள்ளையாரும் உள்ளனர். அதற்கெதிரே மூலஸ்தானத்தின் பின்புறம் திருமாலும் பிரம்மனும் தேடிக்காண முடியாத பிறையண்ணல், லிங்கோத் பவராகக் காட்சியளிக்கிறார். எதிரே பொள்ளாப் பிள்ளையார் அருகில் வரிசையாக 63 நாயன்மார்களின் மூலவ மூர்த்திகளும் சூரிய பகவானும் அருள்புரிகிறார்.

    தட்சிணாமூர்த்தி

    கருவறையின் தெற்கு சுவர் மாடத்தில் குரு தட்சிணாமூர்த்தியும் அவருக்கு அருகில் செல்வ கணபதியும் அருள்புரிகிறார்கள். அறுபத்துமூவர் திருஉருவங்களுக்கு அருகில் சேக்கிழார் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து வடக்கு நோக்கியவாறு பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் நேராக வடக்கிலுள்ள நடராஜர் திருஉருவப் பிம்பத்தை காணலாம்.

    மேற்கு வரிசையில் கற்பகாம்பிகை, ஸோமாஸ்கந்தராகிய அம்மையப்பர் உற்சவ மூர்த்திகளை காணலாம். உள்ளே எங்கேயும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது சரியில்லை. ஏனெனில் எங்கு நோக்கினும் சன்னிதிகள். துவஜஸ்தம்பத்தின் அருகில் தான் அதுவும் வடக்கு நோக்கியே பெண்கள் அஷ்டாங்கமாகவும் ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், விழுந்து கும்பிடுவது சிறந்தது என்கிறது சாஸ்திரம்.

     அங்கம் பூம்பாவை, திருஞானசம்பந்தர்

    வெளி பிராகாரத்தில் அங்கம்பூம்பாவைக்கென்று சன்னிதி தனி விமானத்துடன் உள்ளது. அங்கம் பூம்பாவை கிழக்கு நோக்கி இருக்க அதே சன்னிதியில் திருஞான சம்பந்தர் வடபுறம் பார்த்துகாட்சி தருகிறார். சிவனருள் பெற்ற அங்கம் பூம்பாவையின் கதையை பார்க்கலாம்.

    சிவபிரானின் அடியாரான சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவை ஒரு நாள் நந்தவனத்தில் சிவபிரானுக்காக மலர் பறிக்கும் வேளையில் கொடிய விஷநாகம் தீண்டி மரணமடைந்தாள். செட்டியார் அவளை திருஞான சம்பந்தருக்கு மணமுடிக்க நிச்சயித்திருந்தார்.

    ஆனால் திடீரென நிகழ்ந்த அவளது மரணத்தால் அவரது எண்ணம் ஈடேற முடியாமல் போயிற்று. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உடலை எரித்த அவர் அவளது சாம்பலை மட்டும் கரைக்க மனமில்லாமல் ஒரு பானையில் எடுத்து. வைத்துக் கொண்டார். அச் சமயம் மயிலைக்கு விஜயம் செய்திருந்த திருஞான சம்பந்தர் நடந்த விஷயத்தை அறிந்து சிவநேசரை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அழைத்துவரச் செய்தார். அவரும் தனது மகளின் சாம்பல் அடங்கிய பானையுடன் அவ்விடம் வந்தார்.

    ஞானசம்பந்தர் மனமுருகி சிவபிரானை பிரார்த்தித்தார். உடனே அவர் நாவினின்று 'மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை' என்ற பதிகத்துடன் பாடல்கள் சரளமாக வெளிவந்தன. அவர், ஒவ்வொரு திருநாளாகக் குறிப்பிட்டு, அவ்வைபவத்தை 'அதைக் காணாமல் போகலாமா பூம்பவாய்' என பாடப்பாட சிவபெருமான் அருளுடன் எலும்புகள் இணைந்து சாம்பல் சதை பெற்றது. 12 வயது பெண்ணாக குடம் உடை வெளிப்பட்டாள். சாம்பலும், எலும்பும் கபாலீஸ்வரர் அருளால் மீண்டும் பெண்ணாக மாறிய புண்ணிய க்ஷேத்திரமிது.

    வாகனம், யாக சாலை அனுதினமும் கபாலீஸ்வரருக்கு தீபாராதனை நடக்கும்போது அடிக்கும் பெரியமணி உயரே மதில் சுவரில் கட்டப்பட்டுள்ளது. வடக்குப் பிரகாரத்தில் வரிசையாக வாகனங்கள் வைக்கும் அறைகளும், யாக சாலையும் உள்ளன. வலது புறத்தில் புன்னைவன நாதருக்கு அம்பிகை மயிலாக வந்து பூஜை செய்யும் காட்சியும் அருகில் தல விருட்சமாகிய புன்னை மரம் உள்ளது.

    சனீஸ்வர பகவான்

    சனீஸ்வர பகவானுக்கென்று சன்னிதி தனியாக உள்ளது. காக வாகனத்துடன் மேற்கு பக்கம் பார்த்து அருள்புரியும் இவரை சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.

    நவக்கிரகம்

    சனீஸ்வரருக்கு எதிர்பக்கம் கிழக்கு பிரகாரத்தில் திரும்பினால் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் நவக்கிரகங்கள் மற்றும் ஜகதீச்வரரின் சன்னிதிகள் காணப்படுகின்றன.

    கோவில் பிராகாரம்

    தரிசனம் முடித்து கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் பிராகாரத்தில் உட்கார்ந்து விட்டே கிளம்ப வேண்டும் என்பது மரபு. தெய்வ சிந்தனையுடன் உட்காரும் அந்த சில நிமிட துளிகளில் கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் கிடைக்காது என்பது நிதர்சனம்.

    வீதி உலா

    கோவிலைவிட்டு வெளியே வந்தால் வீதியுலா வரும் தெய்வ மூர்த்திகள் சற்று நேரம் நின்று தரிசனமளிக்கும் 16 கால்மண்டபமும், சன்னிதித் தெருவின் முடிவில் திருத்தேரும் உள்ளன.

    • ஸ்ரீ கற்பகாம்பாளை தரிசனம் செய்தால் சுபமங்களம் கிட்டும்.
    • கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர்.

    1. ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மனைத் தரிசனம் செய்த பின்பு, ஸ்ரீவெள்ளீஸ்வரரை தரிசனம் செய்து ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அன்னை ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசனம் செய்தால் சுபமங்கள சவுபாக்கியம் கிட்டும். இது தரிசன நியதியுமாகும்.

    2. மகாசிவராத்திரி, மாத சிவராத்திரிகளில் ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசித்து சிவ சிவ என்று கூறினால் நமது கர்ம வினைகள் குறைந்து பிறவிகள் தீரும்.

    3. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர். எனவே, இங்குள்ள புறாக்களின் தரிசனம் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    4. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் 3500-க்கும் மேற்பட்ட அதிஅற்புத உன்னத தேவதைகள் இருக்கிறார்கள். எனவே இப்பிரகாரத்தை வலம் வரும் பொழுது நல்ல எண்ணங்களையும், நியாயமான பிரார்த்தனைகளையும் மாத்திரமே மனதில் கொள்ள வேண்டும். வேறு எந்தவிதமான மாற்று எண்ணங்களுடன் இப்பிரகாரத்தை வலம் வருதல் கூடாது.

    5. தட்ச யாகத்தில் தட்சனின் யாகத்தை அழித்த கோபாவேசம் கொண்ட ஸ்ரீவீரபத்திரரை சாந்தப்படுத்தவதற்காக மகரிஷிகளும், முனிவர்களும் பனி மலையைக் கொண்டு அழுத்தி சுவாமியின் உக்ரகத்தைத் தணிக்க முயற்சித்தனர். தந்தையாகிய சிவனுடைய கோபம் தணிந்ததே அன்றி, ஸ்ரீவீரபத்திரரின் கோபம் சிறிதும் தணியவில்லை. பல்வேறு வடிவங்களில் ஸ்ரீவீரபத்திரருக்கு சித்தர்களும், மகான்களும் கோவில்கள் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சிலா ரூபங்களில், மூலாதார சக்தியின் 500-வது பிரதி பிம்பமே ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவீரபத்திர மூர்த்தி ஆவார்.

    6. மேற்குப் பார்த்த சூரியனை, சூரிய ஹோரையில் வழிபடுவது மிகவும் விசேஷமாகும். இவரை வழிபடுவதால் கர்பப்பை சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்திக்கான வழி கிட்டும்.

    7. இக்கோவில் ராகு, கேது பரிகார தலமாகும். இத்தலம் முந்தைய யுகங்களில் ராகு, கேது பரிஹார தலமாக விளங்கியது. இதுபோன்று எதிர் காலத்தில் ராகு, கேது பரிகார தலமாக அமையும் என்பது சித்தர்களின் வாக்காகும்.

    8. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உற்சவ காலங்களில் வெயில் நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ் தானத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் சுவாமியை சுமந்து வரும் அடியார்களுக்கும் அளித்திடில் தொலைத்தொடர்பு துறையில் இருப்போர் மேன்மை அடைவர். தொலைத்தொடர்பில் இருக்கக் கூடிய இன்னல்கள் தீரும்.

    9. "எண்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பர். அந்த சிரசில் உள்ள கபாலம் மிகவும் முக்கியமானது. கபாலம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் அபூர்வமான மூர்த்தி ஸ்ரீகபாலீஸ்வரர் ஆவார். கபாலம் சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தித் தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

    10. நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் அளவு உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு உச்சந்தலையில் தடவிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடவும் பொழுது, ஸ்ரீகேசல குசலாம்பிகாயை நமஹ, ஸ்ரீதையல் நாயகியே நமஹ, ஸ்ரீகபாலீஸ்வராய நமஹ என்று சொல்ல வேண்டும். இதனால் கபாலம் சம்பந்தபட்ட நோய்கள் தணியும். உடலின் உஷ்ணமும் குறையும்.

    11. இக்கோவிலில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக விளக்கெண்ணெயுடன் பசு நெய் கலந்து, தீபம் இட்டு அன்னதானம் செய்திடில், எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். முறிந்த எலும்பானது விரைவாகக் கூடும்.

    12. இங்கு ஸ்ரீஜகதீஸ்வரர் தனிச்சன்னதி கொண்டுள்ளார். இது வாஸ்து பூஜைக்கு உகந்த இடமாகும். இவருக்கு வழிபாடு செய்திட வாஸ்து குற்றங்கள் குறையும்.

    13. ஒரு நாளைக்கு குறைந்தது பதிமூன்று கோபுர கலசங்களையாவது தரிசனம் செய்தல் விசேஷமாகும். இக்கோவிலில் பதிமூன்றிற்கும் மேலாகவே கோபுர கலசங்கள் உள்ளன. தினந்தோறும் கோபுர தரிசனம் செய்வதால் பாவங்கள் தீரும். இதனையே, `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றார்கள் பெரியவர்கள். இக்கோவிலில் அருள்பாலிக்கும் துர்க்கையின் கலியுக திருநாமம் ஸ்ரீபஸ்பத்ரயாக்னி. அமர்ந்த கோலத்தில் மூன்று தேவியர் அருள்பாலிப்பது இச்சிவலாயத்தில் மிகவும் சிறப்புவாய்ந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்திற்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் தான்.
    • `நவாஹம்' என்பது ராமாயணத்தை ஒன்பது நாள் படிப்பது ஆகும்.

    ராமாயணம் என்னும் ராமனின் வரலாற்றைச் சொல்லும் காவியத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த ராமாயணத்தை எப்படி படிக்க வேண்டும் என்பது பற்றியும், ராமாயணத்தின் சில அரிய தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

     உத்தர காண்டம்சொல்லும் செய்தி

    ராவண யுத்தம் முடிந்து ராமர் பட்டாபிஷேகத்துடன் யுத்த காண்டம் நிறைவுறும். நாட்டு மக்களின் பழிச்சொல்லைக் கேட்டு சீதையை மீண்டும் காட்டிற்கு அனுப்புவது, லவ-குசர்கள் பிறப்பது, அவர்கள் வால்மீகியிடம் ராமாயணத்தை கற்றறிந்து அதை நாட்டில் உள்ள மக்களிடம் பரப்புவது, பிள்ளைகளை ராமரிடம் ஒப்படைத்து, சீதாதேவி பூமியில் மறைவது, லவ-குசர்களுக்கு நாட்டை சரியாக பிரித்து வழங்கி விட்டு, சரயு நதியில் ராமர் தன் வாழ்வை முடிப்பது வரையான தகவல்களை உத்தரகாண்டம் தெரிவிக்கிறது.

    வால்மீகி ராமாயணமே பிரதானம்

    வேடனாக இருந்து (சிலர் கள்வர் என்பார்கள்) நாரதரின் அறிவுரையால், ராமபிரானை நினைத்து தவம் செய்து மகரிஷியாக மாறியவர், வால்மீகி. இவர்தான் ராமாயணத்தை வடமொழியில் எழுதியவர். பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான ராமாயணங்கள் இருப்பினும், அனைத்திற்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் தான். இதிகாசங்களின் கீழ் வருகிறது, ராமாயணம்.

    `இதிகாசம்' என்பதற்கு `இது நடந்தது' என்பது பொருளாகும். எனவே உண்மையில் நடந்த ஒரு நிகழ்வையே வால்மீகி ராமாயணமாக வடித்தார். வால்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பர் இயற்றிய கம்பராமாயணம் முதல் போஜ ராமாயணம் வரை ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன. என்றாலும் வால்மீகி எழுதிய ராமாயணத்தையே பிரதானமாக கொள்ள வேண்டும்.

    வால்மீகி எழுதாத உத்தர காண்டம்

    7 காண்டங்கள், 500 ஸர்க்கங்கள், 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்டதாக, ராமாயணத்தை வால்மீகி பாடியிருக்கிறார். காண்டங்கள் என்பது பிரிவுகளையும், ஸர்க்கங்கள் என்பது அந்தப் பிரிவுகளின் உட்பகுதிகளையும் குறிப்பிடுகிறது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்பது 7 காண்டங்களாகும்.

    இதில் உத்தர காண்டம் என்ற பகுதியை வால்மீகி மகரிஷி எழுதவில்லை. பிற்காலத்தில் எழுதப்பட்டு சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கம்பரும் கூட தான் எழுதிய ராமாயண காவியத்தில் பால கண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களை பற்றிதான் பாடியிருக்கிறார். ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் என்னும் பகுதியை, கம்பரின் சம காலத்தவரான ஒட்டக்கூத்தர் இயற்றியதாக சொல்லப்படுகிறது.

    நவாஹ பாராயணம்

    நவாஹ பாராயணம் செய்ய நினைப்பவர்கள் பால் காண்டம் தொடங்கி இறுதியில் ராம பட்டாபிஷேகம் சொல்லி முடிப்பார்கள். `நவாஹம்' என்பது ராமாயணத்தை ஒன்பது நாள் படிப்பது ஆகும். எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    முதல் நாள் : பாலகாண்டம் ஸர்க்கம் 1 முதல் 70-வது ஸர்க்கம் வரை

    இரண்டாம் நாள் : பால காண்டம் ஸர்க்கம் 71 முதல் அயோத்யா காண்டம் 64-வது ஸர்க்கம் வரை

    மூன்றாம் நாள் : அயோத்யா காண்டம் 65 ஸர்க்கம் முதல் 119-வது ஸர்கம் வரை

    நான்காம் நாள் : ஆரண்ய காண்டம் 1-ம் ஸர்க்கம் முதல் 68-வது ஸர்க்கம் வரை

    ஐந்தாம் நாள் : ஆரண்ய காண்டம் 69-ம் ஸர்க்கம் முதல் கிஷ்கிந்தா காண்டம் 49-வது ஸர்க்கம் வரை

    ஆறாம் நாள் : கிஷ்கிந்தா காண்டம் 50-ம் ஸர்க்கம் முதல் சுந்தர காண்டம் 57-வது ஸர்க்கம் வரை

    ஏழாம் நாள் : சுந்தர காண்டம் 58-ம் ஸர்க்கம் முதல் யுத்த காண்டம் 50-வது ஸர்க்கம் வரை

    எட்டாம் நாள் : யுத்தகாண்டம் 51-ம் ஸர்க்கம் முதல் 111-வது ஸர்க்கம் வரை

    ஒன்பதாம் நாள் : யுத்த காண்டம் 112-ம் ஸர்க்கம் முதல் 131-வது ஸர்க்கம் வரை

    • நந்திகேஸ்வரர் ஆலயத்தில் நந்திக்கு கொம்போ, காதுகளோ இல்லை.
    • குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜரை தரிசனம் செய்யலாம்.

    * உற்சவர் இல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

    * கும்பகோணம் அருகே `தாராசுரம்' என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

    * தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

    * கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜரை தரிசனம் செய்யலாம்.

    * கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

    * நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள். பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள். கருடன் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

    * ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

    * திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

    * கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் `பஞ்சவர்ணேஸ்வரர்' என்று பெயர்.

    * விருதுநகர், சொக்கநாதன் புத்தூரில் உள்ள தவ நந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளோ இல்லை.

    * ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும்-சில நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

    * வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோவில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கி உள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

    * சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக்கோட்டை தாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையில் இருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன் வடிவம் கொண்டுள்ளார்.

    * தருமபுரி– பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

    • இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை.
    • ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.

    திருக்குறுங்குடி அற்புதமான தலம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்று பரந்தாமனைப் பாடி பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்). ஸ்ரீபாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு.

    அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும். ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடம் இருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது.

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது "கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீ வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சி லைகள் கிடைக்கும்" என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு `மகேந்திரகிரி நாதர்' என்றும் `பக்கம் நின்ற பிரான்' என்றும் பெயர். இத்தனை சிறப்பு பெற்ற திருக்குறுங்குடியில் பங்குனி பிரம்மோற்சவம் மிகப்பெரிய உற்சவம். அதில் இன்றைய தினம் திருத்தேர்.

    • சித்தர் பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர்.
    • ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை

    தமிழ் சித்த (சைவ) பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர். பதஞ்சலி புகழ்பெற்ற யோக குருவான நந்தி தேவாவிடம் (சிவபெருமானின் தெய்வீக காளை) யோகா மற்றும் பிற பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். சிவபெருமானால் தொடங்கப்பட்ட 18 யோக சித்தர்களில் நந்தியும் ஒருவர். நந்திதேவரின் சீடர்களில் பதஞ்சலி, தட்சிணாமூர்த்தி, திருமூலர், ரோமரிஷி, சட்டைமுனி ஆகியோர் அடங்குவர். ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை நடக்கிறது.

    பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்:

    தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும் படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும். பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    பதினாறு போற்றிகள்

    1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!

    2 ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!

    3. ஒளிமயமானவரே போற்றி!

    4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!

    5. கருணாமூர்தியே போற்றி

    6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!

    7. பூலோகச் சூரியனே போற்றி

    8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!

    9. பேரும் புகழும் உடையவரே போற்றி!

    10. இன்மொழி பேசுபவரே போற்றி!

    11 இகபரசுகம் தருபவரே போற்றி!

    12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!

    13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!

    14 அங்ஞானம் அகற்றுபவரே போற்றி

    15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!

    16.யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

    இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.

    நிவேதனம்

    இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும். பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:

    1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்.

    2 குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

    3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்.

    4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்.

    5. நன் மக்கட்பேறு உண்டாகும்.

    6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.

    7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்.

    8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

    9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

    இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும். பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார் இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.

    • இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.
    • இங்கு லிங்க வடிவம் கிடையாது.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது. பொதுவாக அனைத்து ஆலயங்களும் காலையிலேயே நடை திறந்து இரவில் நடை அடைக்கப்படும். ஆனால் இத்தலத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில் ஆகும்.

    ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர்.

    அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது. மூலஸ்தானத்திற்குள் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

    சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும்.

    அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது.

    அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.

    இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

    கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும்.

     சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபடுவர்.

    ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படும். இவ்விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர்கள்.

    • இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
    • அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கோவில் தோற்றம்

    தில்லை நடராஜர் ஆலயத்தை சுற்றி பல சிவாலயங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் நடராஜர் ஆலயத்தோடு தொடர்பு கொண்டவைதான். இவற்றில் பல ஆலயங்கள் அற்புதங்கள் நிறைந்தவையாகவும் உள்ளது. அப்படி ஒரு ஆலயம்தான், தில்லைவிடங்கன் என்ற கிராமத்தில் உள்ள விடங்கேஸ்வரர் கோவில்.

     தில்லைக்கு வலது கண், தில்லைவிடங்கன் கிராமம். மன்னர் காலத்தில் மாரிமுத்தாப்பிள்ளை என்ற தமிழ்ப் புலவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடக்கும் உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு தேவாரம், திருவாசகம் பாடுவதோடு, தான் இயற்றிய தமிழ் பாடல்களையும் இறைவன் முன்பாக பாடுவார். அவர் தில்லை நடராஜர் ஆலயத்திற்கு செல்லும்போது, தனது தோட்டத்தில் இருந்து வாழைப்பழம் எடுத்துச் செல்வார். இது ஒரு நாளும் தவறியது இல்லை.

    ஒரு நாள் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. அதனால் தில்லை நடராஜர் கோவிலுக்கு எப்படிச் செல்வது என்ற கவலையில் ஆழ்ந்தார். ஒரு கட்டத்தில் ஈசனை மனதில் நினைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லத் தொடங்கினார். வழியில் கந்தமங்கலம் என்ற கிராமத்திற்கு வந்தபோது, மழையின் கடுமை அதிகமானது. இதற்கு மேல் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், அந்த கிராமத்திலேயே ஒரு ஓரமாக தங்கினார். சில மணி நேரங்களுக்குப்பிறகு மழை குறைந்ததும் மீண்டும் கோவிலை நோக்கி பயணித்தார்.

    `நாம் செல்வதற்குள் உச்சிகால பூஜை முடிந்துவிடுமோ? ஈசனுக்கு வாழைக் கனியை கொடுக்க முடியாதோ?' என்ற கவலையோடு, `நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே கோவிலை அடைந்தார். அவரைப் பார்த்ததும் கோவில் அர்ச்சகர்கள், "வாருங்கள் புலவரே.. இறைவனுக்கு கனியை கொடுத்து விட்டு எங்கே சென்றீர்கள்? உச்சிகால பூஜை தொடங்கப்போகிறது. வந்து சாமியை தரிசனம் செய்யுங்கள்" என்றனர்.

    அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புலவர், `சுவாமி என்ன சொல்கிறீர்கள்? நான் மழையால் பல மணி நேரம் ஓரிடத்தில் ஒதுங்கி நின்று விட்டு இப்போதுதான் ஆலயத்திற்கு வருகிறேன். வழக்கமாக நான் அளிக்கும் வாழைப்பழம் கூட என் கையில்தான் உள்ளது. ஆனால் ஏற்கனவே நான் வந்து பழம் தந்ததாக நீங்கள் சொல்கிறீர்களே?" என்று கேட்டார்.

    அர்ச்சகர்களும் ஆச்சரியப்பட்டுப் போயினர். வந்தது ஈசன்தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். உடனே இறைவனின் மகிமையை எண்ணி, கண்ணீர் வடித்த புலவர், இறைவனை நினைத்து மனமுருகப் பாடினார். பின்னர் அவர் இதுபற்றி தன் ஊர் மக்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை.

    அன்று இரவு புலவர் உறங்கியதும், அவரது கனவில் தோன்றிய ஈசன், "என்னைக் காண நீ தினம் தினம் பல சிரமங்களை சந்தித்து தில்லை வருகிறாய். இனி நீ அப்படி தில்லை வரவேண்டிய அவசியம் இல்லை. தில்லைவிடங்கனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் நான் இருக்கிறேன். என்னைக் கொண்டு வந்து இங்கே வைத்து வழிபாடு செய். உனக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்" என்றார்.

    மறுநாள் காலை இதுபற்றி ஊர் மக்களிடம் புலவர் தெரிவித்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. வழக்கம்போல அவரை எள்ளி நகையாடினர். இருப்பினும் மனம் தளராத அந்த புலவர், ஈசன் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டு மகிழ்ந்தார். ஆனால் அந்த சிவலிங்கம் பெரியதாக இருந்ததால், எப்படி இங்கிருந்து தூக்கிச் செல்வது என்று தவித்தார்.

    அப்போது அருகில் மரத்தை வெட்டும் சத்தம் கேட்டு, அங்கு சென்றார். அங்கே சிலர் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் சிவலிங்கத்தை, தன் ஊருக்கு கொண்டு செல்ல உதவும்படி கேட்டார். ஆனால் அவர்களோ, `அப்படிச் செய்தால் எங்களுக்கு ஒரு நாள் கூலி போய்விடும். அந்த கூலியை நீங்கள் தருவதாக சொன்னால், நாங்கள் சிவலிங்கத்தை எடுத்து வந்து உங்கள் ஊரில் கொடுக்கிறோம்" என்றனர்.

    அவரும் சரி என்று கூற, அவர்கள் சிவலிங்கத்தை தில்லைவிடங்கன் கிராமத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போதுதான் ஊர் மக்கள், புலவரை நம்பினர். ஊர் மக்கள் அனைவரும் புலவரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்களுக்கு ஊதியம் கொடுக்க அவர்களைத் தேடியபோது, அவர்கள் அங்கே இல்லை. அந்த சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.

    முதல் வேலையாக அந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒரு சிறிய ஆலயம் அமைத்தனர். அந்த ஊரிலேயே இருந்த ஒரு சிற்பி, அம்பாள் சிலை வடிக்கத் தொடங்கினார். அதையும் அதன் அருகிலேயே பிரதிஷ்டை செய்தனர். நாளடைவில் பல்வேறு சன்னிதிகளுடன் இந்த ஆலயம் விரிவாக்கம் பெறத் தொடங்கியது என்று இந்த ஆலயம் உருவான வரலாறு சொல்லப்படுகிறது.

     ஆலய அமைப்பு

    கிழக்கு பார்த்தபடி அமைந்த இந்த ஆலயம், மகா மண்டபத்தின் வெளியே நந்தி, பலிபீடம், இடதுபக்கம் நவக்கிரக சன்னிதியைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தின் மேலே சிவன்-பார்வதியும், அவர்களின் இருபுறமும் நந்தியும் சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி ஆலயத்திற்குள் நுழைந்தால், இடப்பக்கம் நால்வர் சன்னிதி, தொடர்ந்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், நடராஜர் - சிவகாம சுந்தரி சன்னிதிகளும், வலது பக்கம் ஒரே சன்னிதியில் சூரியன் - சந்திரன், பைரவர், சனீஸ்வரன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தில் தெற்கு நோக்கி பர்வதாம்பாள் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். கருவறைக்குள் வட்டவடிவிலான பீடத்தில் விடங்கேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், வளர்பிறையில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணி முதல் 9 மணிக்குள், அம்பாளின் திருப்பாதத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலர்கள் சமர்ப்பித்து மஞ்சள் கட்டிய திருமாங்கல்யக் கயிற்றை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிப்பார்கள். இதனால் திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள்.

    பொதுவாக கருவறைக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் திருமணத் தடை என்ற கூட்டுப் பிரார்த்தனைக்காக மட்டும், அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் திங்கட்கிழமை தோறும் காலையில் இவ்வாலயம் வந்து, அப்போது இறைவனுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு, அபிஷேக தீர்த்தத்தை வாங்கி பருகினால், பேச்சுக் குறைபாடு நீங்கும் என்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தம்பதியராக இங்கே வந்து மகா மண்டபத்தில் அமர்ந்து `ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை பூஜை, பிரதோஷம் ஆகிய தினங்களும் சிறப்பாக வழிபடப்படும்.

    அமைவிடம்

    சிதம்பரத்தில் இருந்து கிள்ளை செல்லும் பேருந்தில் சென்றால் தில்லைவிடங்கன் கிராமத்தை அடையலாம்.

    ×