இந்தியா, அமெரிக்கா இப்போ ஆஸ்திரேலியா - தொடரும் டிக்டாக் தடை

சீன செயலியான டிக்டாக்கிற்கு இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டிக்டாக்
டிக்டாக்
Published on

முன்னணி வீடியோ செயலியான டிக்டாக்கிற்கு சோதனை காலம் தொடர்கிறது. இந்தியாவில் சீனாவின் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. பின் அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்யும் மனநிலையில் உள்ளது. தற்சமயம் ஆஸ்திரேலியாவும் இந்த செயலியில் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதாக கருத்து தெரிவித்து இருக்கிறது.

பைட்-டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் பயனர் தரவுகளை சீன அரசுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. பயனர் விவரங்களை பகிர்வது தொடர்பாக இணையம் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் இடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 

சமீபத்தில் டிக்டாக் நிறுவனம் தனது அலுவலகத்தை ஆஸ்திரேலியாவில் திறந்தது. புதிய அலுவலகம் திறக்கப்பட்டதில் இருந்தே உள்துறை  அமைச்சகம் டிக்டாக்கின் செயல்பாடுகள் குறித்து விவாதித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருந்தன.

பயனர் தரவுகள் திருடப்படுவது தொடர்பான பிரச்சினைகளை அரசு தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். மேலும் பிரச்சனைகள் உறுதி செய்யப்படும் போது, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க  தயங்க மாட்டோம் என்றும் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 16 லட்சம் பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவை பொருத்தவரை எந்த வகையில் பாதுகாப்பு மீறப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com