

கோபே:
மாற்றுத் திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்றது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கம் வென்றார்.
இறுதி நாளான இன்று இந்தியா ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றது. இத்துடன் இந்தியா 6 தங்கம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 17 பதக்கங்கள் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் 6-வது இடம் பிடித்துள்ளது.
உலக பாரா தடகள போட்டி ஒன்றில் இந்தியா கைப்பற்றிய அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும். இதற்குமுன் கடந்த ஆண்டு பாரீசில் நடந்த போட்டியில் 10 பதக்கங்கள் (3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அதனை முந்தி புதிய வரலாறு படைத்துள்ளது.
சீனா 33 தங்கம் உள்பட 87 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. பிரேசில், உஸ்பெகிஸ்தான், கிரேட் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.