சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி நடத்த ரூ.10 கோடி நிதி: தமிழக அரசு

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.
CM Vijay
Published on

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியை நடத்த ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை ஓபன் டென்னிஸ்

முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் 3-வது சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நவம்பர் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடக்கிறது. 250 தரவரிசை புள்ளி வழங்கும் இந்தப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், முதன்மை செயல் அதிகாரி ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்து ஆலோனை நடத்தினர். அப்போது போட்டியை நடத்த அரசு சார்பில் நிதியதவி அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

ரூ.10 கோடி நிதியுதவி

அவர்களது கோரிக்கையை ஏற்று சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சிறப்பாக நடத்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

இச்சந்திப்பின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஓபன் பெண்கள் போட்டியை சிறப்பாக நடத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தப் போட்டியானது தமிழ்நாட்டை உலக விளையாட்டு அரங்கில் மேலும் உயர்த்துவதுடன், விளையாட்டு சுற்றுலாவை ஊக்குவித்து, இளம் வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் நடத்தப்பட உள்ளது. சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com