

கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி எல்லைகள் தாண்டி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கி வருபவர் ஆவார். கால்பந்தின் மீது அதீத காதல் கொண்டது அர்ஜென்டினா நாடு. அந்த நாட்டின் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராகவும் கேப்டனாகவும் ஈடு இணையற்ற பல்வேறு சாதனைகளை மெஸ்ஸி நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
கால்பந்தாட்டத்தின் கடவுள் டியாகோ மரடோனாவுக்குப் பிறகு அர்ஜென்டினா அணியில் குறிப்பிடத்தக்க இடத்தில் வைத்துப் பார்க்கப்படுபவர் இவர். சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டு அதற்காக தன்னை மெருகேற்றிக் கொண்டவர் மெஸ்ஸி. இந்நிலையில் லியோனல் மெஸ்ஸி தனது 13 ஆவது வயதில் பார்சிலோனா கால்பந்து அணியில் சேர்வதற்காக நாப்கினில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அவரது ரசிகர்களுக்கு தெரிந்ததே. அந்த நாப்கின் தற்போது சுமார் 762,400 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சத்துக்கு) ஏலத்தில் விறக்கப்பட்டுள்ளது அனைவரையும் மலைப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு சமயத்தில் 13 வயதான மெஸ்ஸியை பார்சிலோனா அணியில் சேர்க்க ஆர்வம் காட்டிய அணியின் இயக்குனர் அவசரத்துக்கு கைவசம் காகிதம் இல்லாததால் நாப்கினில் ஒப்பந்த நிபந்தனைகளை எழுதி மெஸ்ஸியை கையெழுதிடச் செய்து அதை இதுநாள்வரை பத்திரப்படுத்தி வந்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில் மெஸ்ஸி தனது திறமையின் மூலம் உலக சாம்பியனாக வளர்ந்துள்ளார்.