பாபா இந்திரஜித், பூபதி குமார் பொறுப்பான ஆட்டம்: 2ம் நாள் முடிவில் தமிழகம் 300/6

முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.தமிழகம் சார்பில் இந்திரஜித் 80 ரன், பூபதி குமார் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
பாபா இந்திரஜித், பூபதி குமார் பொறுப்பான ஆட்டம்: 2ம் நாள் முடிவில் தமிழகம் 300/6
Published on

கோவை:

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

இந்நிலையில், 3-வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து 83 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், அஜித் ராம் 3 விக்கெட்டும், வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தமிழகம் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்க்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் ஜெகதீசன் 37 ரன்னும், சாய் கிஷோர் 60 ரன்னும், பிர்தோஷ் பால் 13 ரன்னும் எடுத்தனர். பாபா இந்திரஜித், பூபதி குமார் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.

இந்திரஜித் 80 ரன்னும், பூபதி குமார் 65 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை தமிழகம் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விஜய் சங்கர் 14 ரன்னும், முகமது அலி 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com