பாஜகவின் மதவெறி அரசியல் தமிழகத்தில் எப்போதும் எடுபடாது- டி.ராஜா பேட்டி

நாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார்.
டி.ராஜா
டி.ராஜா
Published on

திருச்சி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மத ரீதியான அரசியலை முன்னெடுக்கும் பா.ஜ.க.வின் வீழ்ச்சியை உறுதி செய்வதாக இருக்கும். தமிழக மக்களும் நிச்சயம் நல்தொரு தீர்ப்பை வழங்குவார்கள். பா.ஜ.க.வின் மதவெறி அரசியல் தமிழகத்தில் எப்போதும் எடுபடாது. தமிழகத்தில் பா.ஜ.க. உடன் அணி சேரும் கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்படும்.

இந்தியாவில் ஒரு மதரீதியான அரசை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. நாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் உழைப்பால் கட்டி வளர்க்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை பா.ஜ.க. அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது.

அரசியல் சட்டத்தை காப்பாற்றவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும், மக்கள் மிகப் பெரிய கடமை ஆற்ற வேண்டும். பா.ஜ.க. ஆட்சி நீடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை பா.ஜ.க. அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது.

நீதித்துறையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். அவர்கள் கோரிக்கைகளை ஏற்க பா.ஜ.க., அரசு தயாராக இல்லை. இந்த பின்னணியில் தான் தேர்தல் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com