

ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 28 ரன்கள் அடித்த பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை படிதார் முறியடித்துள்ளார். 30 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை படிதார் அடைந்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் 31 போட்டிகளில் 1000 ரன்களை அடித்திருந்தார் .
ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் (25 போட்டிகளில்) முதல் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெங்களூரு அணிக்காக கோலி, படிக்கலுக்கு அடுத்தபடியாக 1000 ரன்களை கடந்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார்.