ரோகித் சர்மா, சுப்மன் கில் அபார சதம்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 473/8

இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 473 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
ரோகித் சர்மா, சுப்மன் கில் அபார சதம்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 473/8
Published on

தரம்சாலா:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.

ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார் ரோகித் சர்மா. இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில்லும் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.

2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரை சதமடித்தனர். சர்ப்ராஸ் கான் 56 ரன்னும், படிக்கல் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஜடேஜா, துருவ் ஜுரல் தலா 15 ரன்னும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com