

இந்தியாவில், அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் பரபரப்பாக நடைபெறுகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த போட்டித்தொடரில், தற்போது நடைபெறுவது 13-வது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இன்று கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் முக்கியமான போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், விராட் கோலி அடித்த 49 சதங்களை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அந்த அரங்கிற்கு செல்லும் வழி நெடுக கோலியின் முதல் சதத்தில் இருந்து அவரது 49-வது சதங்களையும் குறிப்பிடும் விதமாக 49 கட்-அவுட்களை வைத்துள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், விராட் கோலி.
கடந்த 2008ல், ஐ.பி.எல். (IPL) 20 ஓவர்கள் போட்டிக்கான அணிகளில், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இவர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து கோலிக்கு கர்நாடகாவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.