உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 5-ந்தேதி தேரோட்டம்

தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ந்தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது.
தைப்பூச திருவிழாவையொட்டி கொடிப்பட்டத்தை ஊர்வலமாக கொண்டு சென்றபோது எடுத்த படம்.
தைப்பூச திருவிழாவையொட்டி கொடிப்பட்டத்தை ஊர்வலமாக கொண்டு சென்றபோது எடுத்த படம்.
Published on

தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது.

கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் கொடிப்பட்டத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தார். தொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு தர்ப்பை புற்களால் அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர் வீதி உலா, உச்சிகால பூஜை நடைபெற்றது.

மாலையில் சாயரட்சை, சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதி உலா, சேர்க்கை தீபாராதனை, பரதநாட்டியம், சமய சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

விழாவில் தேர்திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினசரி காலை சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, விநாயகர் வீதி உலா, இரவில் சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை கஜவாகனம், அன்னவாகனம், கைலாய பர்வதவாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா, சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது

9-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com